2015-02-19

பூத்து நிறையும் செண்பக வாசம்


'அனிதாஎந்திரிச்சதுல இருந்து கதைப்புத்தகத்தைத் தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்க...வந்து தோசையைச் சாப்பிடு. ஹாஸ்டல்ல என்ன உருப்படியா சாப்பிட்டிருக்கப் போற?'

அடுப்படியில் இருந்து அம்மா கூப்பிட்டார். அதிகாலையில் 'வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தியவள்' என்று ஆரம்பித்த தெருவின் ஒலிபெருக்கி, ஊதாக் கலர் ரிப்பனைக் கூவியழைத்து திருவிழா மனநிலையை வலிந்து உருவாக்க முயன்று கொண்டிருந்தது.

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன்.

'சாப்பிட்டுட்டுப் பெரியம்மா வீடு வரை போகணும். மாவிளக்குக்கு மாவு இடிச்சு வைக்கிறேன்னு சொல்லுச்சு. போய் வாங்கிட்டு வந்துரு'

'ம்ம்ம். செண்பகா அக்கா வருதா திருவிழாவுக்கு?'

'அக்கா இங்கதான் இருக்கு. போனதடவை நீ ஹாஸ்டலுக்குப் போன ரெண்டு நாள்லயே வந்திருச்சு. அவங்க வீட்ல பெரிய பிரச்சனை. இனி சேர்ந்து வாழ முடியாதுன்னு அனுப்பிட்டாங்க'

'என்னம்மா சொல்ற? பிரச்சனையா?  நல்லாதான இருந்தாங்க?'

'ஆமா...குழந்தை இல்லன்னு காரணம் சொல்றாங்க'

'இது ஒரு காரணமா? கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தான ஆகுது? அதுவும் இப்போ எவ்வளவு ட்ரீட்மெண்ட்ஸ் வந்துருச்சு?'

'இல்லம்மா, எதுக்கும் வழி இல்லை. அக்காவுக்கு கர்ப்பப்பைல ஏதோ பெரிய பிரச்சனையாம்'

'என்னம்மா இது? அப்படியே இருந்தாலும் குழந்தைதான் வாழ்க்கையா? செண்பாக்கா மாமா ரொம்பப் பாசமா இருந்தவர்தானே?'

'எல்லாம் மாறிப்போச்சு. குழந்தை பிறக்காதுன்னதுமே கடுசா நடக்க ஆரம்பிச்சுட்டான். 'கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்'ன்ற மாதிரி நிறையப் பேசி, அவனைக் கல்யாணம் பண்ணத் தயாரா இருக்க பொண்ணைக் காமிச்சு மனசை மாத்திட்டாங்க'

எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. செண்பா அக்காவை வேண்டாம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? முகமெல்லாம் புன்னகையும் கொஞ்சமும் கபடம் இல்லாத பாசமுமாக அன்பைப் பொழியும் ஒருத்தியையும் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு என்ன இழக்கிறோம் என்று புரிந்திருக்குமா?

'திருவிழா முடியவும் பெரியவங்களை எல்லாம் கூட்டிட்டுப்போய் அவங்க வீட்ல பேசணும்னு அப்பாவும் பெரியப்பாவும் முடிவெடுத்திருக்காங்க. பெரியம்மாதான் அழுது ஓயுது'

அம்மா சொல்லிக்கொண்டே போக எனக்கு மனது முழுக்கக் கசந்து வந்தது.

அக்காவை எப்படி எதிர்கொள்ள என்று புரியாமல் மெல்ல 'பெரிம்மா' என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். மலர்ந்த புன்னகையுடன் அக்கா வெளியே ஓடி வந்தாள்.

' அனிதா, எப்போ வந்த ஹாஸ்டல்ல இருந்து? சாப்பிடுறதே இல்லையா? ரொம்பப் படிச்சு இளைச்சுப் போயிட்ட' என்று இயல்பாகக் கேட்டுக்கொண்டே என்னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த அக்காவின் கைகளில் என் கைகள் உணர்ந்த வெம்மையில் மனம் லேசாகியது.

வானம் மெல்ல இருட்டத்தொடங்கிய பொழுதில் நையாண்டி மேளமும் உருமியும் சன்னமான ஒலியாகக் கேட்கத் தொடங்கியது. மாவிளக்கு ஊர்வலம் தொடங்கியாயிற்று.

'அடுத்த தெருவுக்கு வந்துட்டாங்க போல. மாவிளக்கை ஏத்தித் தாம்பாளத்தைக் கையில் எடுத்துக்கோ. செண்பா கூடவே போய் கோவில்ல இறக்கி வை. நான் பின்னாடியே பொங்கல் வைக்க சாமான் எல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்'

தட்டை எடுத்துக் கொண்டு ஊர்வலத்தின் கடைசியில் சேர்ந்து நடக்கத் தொடங்கியதும் அக்காவை எதிர்பார்க்கத் தொடங்கியது மனது. எப்பொழுதும் மிகை குதூகலம் மட்டுமே இருக்கும் இந்தத் தருணத்தில் இன்று மனது ஒரு திகைப்புடனே அலைபாய்ந்தது.

செண்பா அக்காவின் தெருவில் நுழையவும், அக்கா மாவிளக்குத்தட்டோடு வீட்டிலிருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது. பாசிப்பச்சைப் பட்டில் , மாவிளக்கின் ஒளியில் அக்காவைப் பார்க்கவும் மனதிலிருந்த நெருடலெல்லாம் சட்டென விலகி பெரும் பரவசம் ஆகியது.

ஓர் அதிகாலைப் பொழுதில், மூக்குத்தியின் பேரொளியுடன், வாஞ்சையாக அணைத்துக் கொள்ளும் நேசச் சிரிப்புடன் நின்றிருந்த கன்னியாகுமரி தேவியின் ஏகாந்த தரிசனத்தின்போது இருந்த பரவசத்திற்கு சற்றும் குறையாததொரு மனநிலை.

சட்டென கவனம் ஈர்க்கும் அழகு இல்லை அக்காவுக்கு. மாநிறமும், திருத்தமான முகமும், அனைத்திற்கும் மேல் சட்டென மலரும் தெற்றுப்பல் சிரிப்புமாக, எனக்கு எப்போதுமே அக்கா தேவதைதான்.

'முளைப்பாரி போடுங்கம்மா முத்துமாரியைப் பாடுங்கம்மா 
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை
தானானை தானானை தானானை தானானை'

முளைப்பாரியைச் சுற்றிக் கும்மியடித்துக் கொண்டிருந்த பெண்களைக் கடந்து கோவிலில் மாவிளக்கை இறக்கி வைத்துப் பூசைக்கு நின்றோம். பூசாரி தந்த குங்குமத்தைப் பூசிக்கொண்டு அக்காவைப் பார்க்க, அவள் வெகு சிரத்தையாய் வகிட்டில் குங்குமம் இட்டபின் தாலியிலும் இட்டுக்கொண்டு கண்ணில் ஒற்றித் தழையவிட்டாள்.

கும்மியை வேடிக்கை பார்க்க வாகான இடம் பார்த்து நின்று கொண்டோம். அக்காவிடமிருந்து பிரசாதம் வாங்கும்போது ஒரு பார்வை பார்த்து விட்டு,பெருமூச்சை மறைத்துக் கொண்டே அக்காவிடம் சொன்னேன்.

'அக்கா, அப்படியே மீனாட்சியம்மன்எந்திரிச்சுநடந்து வந்த மாதிரி இருக்க.கிளியும் கிரீடமும்தான் இல்லை. நானே கண்ணு வச்சிட்டேன் போ'

'அப்படியா?? அப்ப இப்படியே போய் உங்க மாமாவை மயக்கிக் கூட்டிட்டு வந்துருவமா??'

சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்க, விக்கித்துப் போய், செய்வதறியாது அசட்டுத்தனமாக நானும் சிரிப்பில் கலந்து கொண்டேன். மேளமும் உருமியும் போட்டியிட்டு ஒரு தீவிரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

அதன் பின்னான ஏழு மாதங்களில், பேச்சுவார்த்தைகளெல்லாம் தோற்றுப் போய் அக்காவுக்கு விவாகரத்து ஆகிவிட்டிருந்தது. அதுவரை விடுமுறையில் வந்திருந்த போதெல்லாம் அவள் வீட்டிற்குப் போவதைத் தவிர்த்து வந்தேன். பெரியம்மாவின் அழுகையும் புலம்பலும் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் ஒரு தைரியத்தோடு அக்காவைப் பார்க்கக் கிளம்பினேன்.

வீட்டில் அக்கா மட்டும் சமைத்துக் கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டே போய்ப் பக்கத்தில் நின்றதும் துளியும் மங்காத அற்புதப் புன்னகை என்னை அள்ளிக் கொண்டது.

நலம் விசாரிக்கும் அக்காவின் பேச்சில் கலக்கமெல்லாம் மறந்து தற்செயலாகவோ வலியவோ அவள் கழுத்தில் பார்த்தேன். சாதாரணச் சங்கிலி செண்பா அக்காவை மேலும் அழகாக்குமாறு அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது.






No comments: