வீட்டுக்குள் நுழையும்போதே ‘என்னண்டோ’ வந்தது காளிக்கு. அவதியாக ஒருடம்ளர்
தண்ணி மொண்டு குடித்துவிட்டு, வட்டிலையும் பழையசோத்துச்சட்டியையும் எடுத்துக்கொண்டு ‘உஸ்ஸ்ஸ்’ என்று உட்கார்ந்தாள்.
‘வெயிலென்ன ஆனி மாசம் போலவா இருக்கு? பங்குனி சித்திரையெல்லாம் தோத்துப் போகும்போல. கந்தக பூமின்றாகளே…அதுவும் சரியாத்தேன் இருக்கு. இந்த ஊர் வெய்யிலு மட்டும் ஆளையே எரிக்கிறாப்புலதான் அடிக்கி’
புலம்பிக்கொண்டே பேங்க் வீட்டம்மா கொடுத்த பழைய குழம்பை சருவப்பையிலிருந்துசோற்றில் கொட்டிப் பிசைந்து ரெண்டு கவளம் வாயில்போடவும்தான் கொஞ்சம் சீவனே வந்தது.
விடிய டீத்தண்ணி குடித்துவிட்டு, பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பிய கையோடு
கிளம்புகிறவள். மூனு வீட்டு வேலை முடித்து வர வெயில் உச்சிக்குஏறிவிடும்.
ஒன்னரை மைல் வெயிலோடே நடந்து வீட்டுக்கு வர கொஞ்சம் அசத்ததான் செய்யும். ஆனால் கஞ்சியைக் குடித்த கையோடு ஊறப்போட்ட துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, திரி சுத்த உட்கார்ந்து விடுவாள்.
ஒரு வாரமா மனசு ஒரு நிலையிலேயே இல்லை. கண்டதையும் யோசித்துக் குழம்பியதில் ஒரு வேலையும் ஓடலை. கொஞ்சம் நேரம் அசந்து எந்திரிக்கவும் பால்வாடியிலிருந்து சின்னவன் வரவும் சரியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே யோசனைகளூடே படுத்துக் கிடந்தாள்.
அரைத்தூக்கத்தில் இருக்கையில் ‘டமார்’ என்று சத்தம். கண்ணுக்குள் சடாரென வெளிச்சம் பரவ தூக்கி வாரிப்போட்டு உட்கார்ந்தாள் காளி. ‘வெருக்’கென்று திரும்பிய பூனை அவளைப் பார்த்துவிட்டு வெளியே ஓடியது.
‘சை, வெளங்காத பக்கி. இங்க பாலும் தயிருமா பொங்கிக் கெடக்காக்கும்…பாத்திரத்தை எல்லாம் உருட்டிக்கிட்டு…’
கொண்டை முடிந்து கொண்டே எழுந்தாள். ஒவ்வொரு வேலையாகச் செய்யும்போதும் நெஞ்சுகுக்குள் திடுக்கிட்டுக் கொண்டே இருந்தது.
பொழுதுசாய, அமாவாசை வந்து சேர்ந்தான்.
‘பெரியவனே, தேங்காயெண்ணை புட்டி எடுத்துட்டு வாடா’
சத்தங்கொடுத்துக் கொண்டே வாசல் தொட்டியில் கைகால் கழுவத் தொடங்கினான். காளி தேங்காயெண்ணைப் புட்டியை அவன் கையில் போய்க் கொடுத்து விட்டு, கொஞ்சம் தள்ளியிருந்த துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள்.
அமாவாசையின் உடலெங்கும் வெள்ளி பூசினாற்போல் மினுமினுத்தது. எண்ணையை முழுக்கத் தேய்த்து, தேங்காய் நாரால் தேய்க்கத் ஆரம்பித்தான்.
ஒட்டியிருந்த வெடிமருந்து கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து தண்ணீரில் வெளியானது.
கல்யாணமாகி வந்த புதுசில் காளியும் ஃபயராபீசுக்குத்தான் போய்க்கொண்டிருந்தாள்.
சரவெடிக்குச் சரங்கட்டும் வேலை. பத்து நாளிலேயேஇளைப்பு மாதிரி வந்து
ஆசுபத்திரிக்குப் போக வேண்டி வந்தது.
‘வெடிமருந்து உடம்புக்கு ஒத்துக்கலை, பயராபீசுக்கு அனுப்பாத…இல்லேன்னா இளைப்பு அதிகமாகிட்டேதான் இருக்கும்’ என்று டாக்டர் அமாவாசையிடம் சொல்லியதிலிருந்து ஒரேடியாக வேலைக்கு வேண்டாமென்று சொல்லி விட்டான்.
பிறந்த ஊரில் தீப்பெட்டி ஆபீசுக்கு வேலைக்குப் போனவள்தான். மருந்து வாடைக்குத் தலையெல்லாம் பேன் பிடிக்கும். அதைத் தவிர ஒன்றும் பிரச்சனையில்லை. என்னமோ வெடிமருந்து ஒத்துக்கொள்ளவில்லை. ஒத்தச் சம்பளத்தில் என்ன செய்ய முடியும்? ஏதோ வீட்டு வேலைகள் கிடைத்ததால் காலம் ஓடியது. கூடமாட செலவுக்குத் திரி சுத்துவதும் பட்டாசுக்குப் பேப்பர் சுத்துவதுமாக சமாளிக்கிறாள்.
‘என்ன யோசனைலயே உக்காந்துக்கிட்டு இருக்க??’ கையைச் சுரண்டிக்கொண்டே அமாவாசை கேட்டான்.
‘நேத்து சொன்னதுதான். யோசன செஞ்சியா, எப்ப மொதலாளிட்ட பேசப் போற?’
‘யோசிக்க என்ன இருக்கு? வேலையை விட்டுட்டு என்ன செய்யச் சொல்ற?’
‘என்னமாச்சும் செஞ்சிக்கிருவோம். அழகர் மாமாட்ட சொல்லி தோட்டி வேலைக்கு பஞ்சாயத்து பெரசண்டுட்ட கேக்கச் சொல்லுவோம்’
அமாவாசைக்குச் சிரிப்பு வந்தது.
‘நீதான தோட்டி வேலைக்கெல்லாம் போக வேணாம், நம்ம காலத்துலயாச்சும் சாக்கடை நாத்ததுலருந்து வெளிய வருவோம்னு பேசுன?’
‘சொன்னேன். நம்ம அப்பனாத்தா பட்ட பாட்டையெல்லாம் நாமளும் படணுமா, கொஞ்சமாச்சும் வெளிய வருவோம்னு பாத்தேன். இன்னுங்கூட பேங்க்காரம்மா சிலசமயம் “ஒங்காளுகளையெல்லாம் வீட்டுவேலைக்கு வச்சு வீட்டுக்குள்ள விடுற காலமும் வருமுன்னு யாரு நெனச்சா”ன்னு பேசுது. எல்லாப் பேச்சுலருந்தும் நம்ம பிள்ளைகளாச்சும் தப்பிக்குமுன்னு நெனச்சேன். சரி, இப்ப நமக்கு ரோசம் முக்கியமா உசுரு முக்கியமா?’
எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. போனவாரம்முதலிப்பட்டியில் ஃபயராபீஸ் வெடிக்கும்வரை.
வீட்டுக்குள் உட்கார்ந்து திரி சுத்திக் கொண்டிருந்த காளி பதறிப்போய் எழுந்து வெளியே ஓடிப்போய்ப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. எங்காச்சும் ட்ரான்ஸ்பார்மர் வெடிச்சிருக்கும் என்று பக்கத்து வீட்டு அக்கா சொல்லியது.
திரும்ப வந்து திரி சுத்த உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே வீதியில் அழுகைச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. முதலிப்பட்டி பயராபீசில் வேலை பார்த்த முக்குவீட்டு சொக்கன் வீட்டில் நிறையக் கூட்டம். ஆளாளுக்குப் பதற்றத்தில் இருந்தனர்.
‘நாப்பதாளுக்கு மேல உசுரு போயிருச்சுன்றாக. அம்பது பேருக்கிட்ட பெரியாசுபத்திரிக்கித் தூக்கிட்டுப் போயிருக்காகளாம். ஆபீசு சுவத்தைத் தாண்டிக்கூட சதையெல்லாம் செதறிக் கெடக்குன்றாக’
கேக்கும்போதே இருட்டிக்கொண்டு வந்தது காளிக்கு. சொக்கன் உடலைக் கொண்டு வந்தபோது கூட அமாவாசைதான் போயிருந்தான். ‘பாக்க சகிக்கல காளி’ என்று ஒருபாட்டம் புலம்பினான்.
மறுநாளிலிருந்து பயராபீஸ் வேலையை விடு என்று புலம்ப ஆரம்பித்தவள்தான்.
அமாவாசை எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
‘மூஞ்சத் தூக்கி வக்காம வந்து சோத்தப் போடு’
அமாவாசையின் குரலுக்கு சுரத்தே காட்டாமல் எழுந்து வீட்டுக்குள் போனாள் காளி.
சோற்றை அளைந்து கொண்டே அமாவசை காளியைப் பார்த்தான். பாவமாக இருந்தது.
‘பதறாம யோசிச்சுப் பாரு, இருவதாயிரம் அட்வான்சு வாங்கித்தான இந்த ஆபீசுல
வேலைக்குச் சேர்ந்திருக்கு? அந்தக் காசுலதான் வீட்டுக்கு ஓடு மாத்தியிருக்கோம். சேந்து நாலு மாசத்துக்குள்ள இப்ப வேலை வேணாம்னா அட்வான்சைத் திருப்பித் தர எங்க போறது? அதோட தோட்டி வேலைக்கு இப்ப எம்புட்டு கெராக்கின்னு தெரியாமப் பேசுறயே’
‘உசுருக்குப் பாதுகாப்பில்ல, வேலைக்கு யாரும் வர்றதில்லைன்னுதான அட்வான்சு குடுக்காக? பொழப்புக்கு வழியில்லாத ஆளுகதான் போயி விளுகுறோம்’
எதையும் காதிலேயே வாங்காதது போல அமாவாசை தொடர்ந்து பேசிக்கொண்டே போனான்
‘இந்தத் தீவாளிக்கு வழக்கமாத் தர்ற போனசோட கூட முன்னூர்ரூவா எல்லாருக்கும் தருவாக, எல்லாம் வழக்கம்போல வேலைக்கு வாங்கன்னு சூப்புரவசைர் சொன்னாப்புல’
‘ரூவாயப் பத்தியா இப்பப் பேச்சு?’
‘சும்மாப் பொலம்பாத. இன்னிக்கு ஆபீசுக்கு ஆபீசர்மாருக சோதனைக்கு வந்திருந்தாக.
வேலை பாக்குறவுகளையெல்லாம் கூப்பிட்டுப் பேசுனாக. எல்லா ஆபீசும் இனி
பாதுகாப்பா இருக்கும்னு சொல்றாக’
‘இதயேதான் போன வருசம் தியாகராசபுரம் ஆபீசு வெடிச்சப்பவும் சொன்ன…’
‘என்னை என்ன செய்யச் சொல்ற? இப்ப வேலைக்குப் போகையிலயே மாசக்கடைசில கடன் வாங்குற மாதிரிதான் இருக்கு. வாங்குன பழைய கடனக் கட்டவும் பிள்ளைகளுக்கு செலவுகளப் பாக்கவுமே சரியாப் போவுது. ரொம்பப் போட்டு ஒழட்டாத, ஒன்னு ரெண்டு வருசம் போவட்டும். அட்வான்சைக் கழிக்கவும் சித்தாளு, நிமிந்தாளுன்னு ஏதாவது வேலைக்குக் கேப்போம்’
என்ன சொல்லவென்றே காளிக்குப் புரிபடவில்லை. அமாவாசை சாப்பிட்டு எழவும் தட்டைத் தூக்கி அங்ஙணத்தில் போட்டுவிட்டு வாசப்படியில் போய் உட்கார்ந்தாள்.
நாரணாபுரம் பயராபீசிலிருந்து ‘டெஸ்ட் வெடி’போட்டுக்கொண்டிருந்தார்கள். ஐந்து நொடி இடைவெளியில் கீழிருந்து கிளம்பிய தீப்பந்துகள் மேலே போய் மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்களில் பூப்பூவாக வெடித்துச் சிதறியது.
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காளியின் கண்களின் ஈரத்தில் வானத்துப் பட்டாசு ஒளியின் சிதறல் மினுமினுத்துத் தெரிந்தது.