2018-07-12

தொப்பி தோசை

கேத வீட்டிலிருந்து உடன் வந்த கசகசப்பு, மூன்று மணி வெய்யிலில் பேருந்துக்குக் காத்திருப்பதன் எரிச்சலோடு சேர்ந்து முகத்தில் கடுகடுப்பைக் கொண்டு வந்தது. செத்துப் போகும் புண்ணியவான்கள் பங்குனி, சித்திரையில் சாகாவிட்டால்தான் என்ன?!
‘உஸ்ஸ்ஸென்று பெருமூச்சு விட்டு கொஞ்சம் ஆறுதல்படுத்திக் கொண்ட பூரணி லேசாகத் திரும்ப, பக்கத்தில் நின்றிருந்த ஒரு கிராமத்துக் கிழவி, ‘வெய்யிலு சாஸ்திதான், பொட்டு மழை இல்ல…சோளம் போட்டு எல்லாம் கருகிப் போச்சு என்று பூரணியிடமோ தனியாகவோ புலம்பினாள். கரிசக் காட்டுச் சம்சாரியாக இருந்து கொண்டு இந்தப் புலம்பல் இல்லாவிட்டால்தான் விந்தை.
பசியும் சோர்வும் சேர்ந்து இருட்டிக் கொண்டு வந்தது. வேளை கெட்ட வேளையில் எங்கே போய்ச் சாப்பிட? எதிர் வரிசைக் கடைகளை மெல்ல நோட்டம் விட்டாள் பூரணி. பத்தடி தூரத்தில் மூன்று பரோட்டாக் கடைகள். அந்த வெய்யிலிலும் பொன்னிற பரோட்டாக்கள் பொரிந்து கொண்டிருந்தன. மாநில உணவல்லவா!  
பூரணிக்கு நேர் எதிரே ஒரு டீக்கடை. ஒரு கையில் புகை அல்லது வடையும், மறு கையில் தேநீரும் கொண்டு குழுமி நிற்க ஆண்களுக்கு என்றே படைக்கப்பட்ட இடம். அவசரப் பசிக்குக் கூட ஒரு தேநீர்க் கடையிலோ உணவகத்திலோ தனியாகப் போய் ஒரு பெண் உணவருந்துதல் என்பது நம் ஊரில் பெரிய புரட்சி. சிற்றூராக இருந்து விட்டால் யுகப் புரட்சி. பிள்ளைகளுடனோ, உடன் ஓரிரு பெண்களுடனோ போனால் லேசான மன்னிப்புக் கிடைக்கும்.
வலது கோடியில் ஒரு ‘ஆரிய பவனம் தென்பட்டது. கொஞ்சம் தயங்கி, பின் வேக நடை போடத் துவங்கினாள் பூரணி. நல்லவேளையாக ‘உங்க வீட்டம்மாவ ஹோட்டல்ல பாத்தேன் எனும் ஆட்கள் யாரும் தெரியாத ஊர். அப்படியே யார் கண்ணிலாவது தட்டுப்பட்டாலும் பரவாயில்லை. பசியோடும் சிறு குறுகுறுப்போடும் உணவகத்தில் நுழைந்த பூரணி, ஒரு மூலையில் இருந்த மேசையில் உட்கார்ந்து கொண்டாள். அசட்டையாக வந்த சிப்பந்தி, ‘டிபன்தாம்மா இருக்குஎன உணவுப் பட்டியலை நீட்டினார்.
பட்டியலுக்குக் கண் போகும் முன்னரே, சுவரில் தொங்க விடப் பட்டிருந்த உணவு வகைகளின் படங்கள் கவனத்தை ஈர்த்தன. சட்டென்று ஒரு லேசான திடுக்கிடலைத் தந்தது, பூரி செட்டிற்கு அடுத்திருந்த படம். பொன்முறுவலாக வார்க்கப்பட்டு, தொப்பி போல நேர்த்தியாகச் சுருட்டப்பட்டு, தலையில் உள்ளங்கை அகல வட்டத் தோசை ஒன்று கிரீடம் வைத்தாற் போல செருகி வைக்கப்பட்ட தொப்பி தோசை.
பெரும்பாலான தென் தமிழ்க் குடும்பங்களைப் போலவே, பூரணியின் குடும்பத்திற்கும் திருச்செந்தூர்தான் அதிகபட்சமாகச் சுற்றுலா செல்ல வாய்க்கப்பட்ட இடம். கூடுதல் நற்பேறு கிடைத்தோருக்கு குற்றாலக் குளியல் கிட்டும். பூரணி அப்பாவிடம் அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. பூரணி பதின்மத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது திருச்செந்தூரிலிருந்து ஒரு திரும்புதல் பயணம்.
கோவில்பட்டியில் ஒரு உணவகத்தில் இரவு உணவு. தூக்கக் கலக்கமெல்லாம் ஓடி ஒளிய, பூரணியும் அவள் அண்ணனும் ஆவலாக இலை முன்னே அமர்ந்திருந்தனர். அம்மா சலிப்புடன் தம்பியைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கை கழுவி விட்டு வந்த அப்பா ஒரு நொடியும் சிந்திக்காமல், மேசையில் அமர்ந்துகொண்டே ‘அண்ணாச்சி, ரெண்டு பொங்கலும் ரெண்டு செட் பூரியும் சொல்லுங்க என்று உரக்கக் கத்தினார். பூரணிக்கு எப்படியோ போனது. பூரியைத்தவிர வேறு எதுவுமே  உணவங்களில் அவள் சாப்பிட்டிருக்கவில்லை. அண்ணனுக்கு மட்டும் திருவிழா சமயம் நண்பர்களுடன் போய் பரோட்டா சாப்பிட்டு வர அனுமதி உண்டு.
பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே பக்கத்து மேசையில் இருந்த சிறுவனுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்ட தொப்பி தோசை பூரணியை முழுதாக ஈர்த்தது. அப்படி ஒரு தோசை வடிவை அவள் பார்ப்பது அதுவே முதல் முறை. பூரியை அனிச்சையாகத் தின்று கொண்டு, ஓரக்கண்ணால் பக்கத்து மேசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இயந்திரமாகச் சாப்பிட்டு முடித்த அப்பா அண்ணனைக் கூப்பிட்டுக் கொண்டு வாழைப்பழம் வாங்கப் போக, அம்மா தம்பியைத் தூக்கிக் கொண்டு வெளியே காத்தாடப் போனாள்.

Image result for cone dosa
(PC: Google)
அந்த நேரம் பார்த்து சிப்பந்தி வந்து ‘பாப்பா வேற என்னமும் வேணுமா என்று கேட்க, பூரணி மொத்த ஆவலையும் கொட்டி, பக்கத்து மேசையைக் காட்டி அந்த மாதிரியே தோசை வேணும் என்று கேட்டுக் காத்திருந்தாள். தொப்பி தோசை அவள் முன் வந்து வைக்கப்படவும், அப்பா எதிர் நாற்காலியில் வந்து உட்காரவும் சரியாக இருந்தது. அப்போதும் அவள் கண்கள் முழுக்க தோசையில்தான் இருந்தன. முகம் பூரிப்பில் மலர்ந்திருக்க, தன்னைச் சுட்டெரிப்பது போல முறைத்துக் கொண்டிருந்த அப்பாவின் கண்களை அவள் சந்திக்கவே இல்லை.
தோசையை விண்டு இரண்டு வாய் வைத்ததுமே, முதுகில் படார் என்று ஒரு அடி விழுந்தது. தம்பியின் நசநச அழுகையை மீறி அம்மா பல்லைக் கடித்துக் கொண்டு சீறினாள். ‘ஆம்பளப் பய, சொன்னதைத் தின்னுட்டு எந்திரிச்சிப் போய்ட்டான், நீ என்னடான்னா நீயா தோசை சொல்லியிருக்க….எவ்வளவு தெனாவெட்டு? கண்ணெல்லாம் நிறைய பூரணி அப்பாவைப் பார்த்தாள். பணம் கட்டிய ரசீதைக் கையில் வைத்துக் கொண்டு மொத்த வெறுப்பையும் முகத்தில் திரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அழுகை தொண்டையில் விக்க, பூரணி மெல்ல எழுந்தாள். ‘ம்? என்று அப்பா கண்ணுயர்த்த, அரண்டு போய் மறுபடி அமர்ந்து விக்கியவாறே தோசையை விழுங்கி எழுந்தாள்.
இளநிலைக் கல்லூரி முடித்த உடனே கட்டிக் கொடுக்கப்பட, அந்த வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடன், இந்தக் கதையைக் கணவனிடம் சொல்லி இருந்தாள். அந்தச் சம்பவத்திலிருந்தே பூரணிக்கு உணவு வகைகளின் மீதான விருப்பம் மிகவுமே அதிகமாகி இருந்தது. புத்தகங்களில் வாசிப்பது, தொலைக்காட்சியில் பார்ப்பது, காதில் விழும் தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டே, குடும்பத்தில், அக்கம்பக்கத்தில் பேசுகையில் எல்லாம், ‘மதுரைல ஜெயவிலாஸ் க்ளப்ல வான்கோழி பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா? அட்டகாசமா இருக்குமாம், ‘சிவகாசி போனா டீலக்ஸ்ல பரோட்டா சாப்பிட்டு, மால்குடில டீ குடிங்க, ‘ஸ்ரீவில்லிபுத்தூர்ல சாமி கும்பிட்டு முடிச்சு, கோவில் பக்கத்துலயே கதிரவன்ல நெய் சப்பாத்தியும் சுசியமும் திங்கணும் என்று அனைத்தையும் சுவைத்தவள் போல ஆர்வமாகச் சொல்வாள்.
ஒரு விழாவின் பின், வந்திருந்த விருந்தினர்களோடு கூடத்தில் அமர்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில், கதாநாயகி முன் தொப்பி தோசை கொண்டு வந்து வைக்கப்பட்டது. சட்டென்று உரக்கச் சிரித்த பூரணியின் கணவன், ‘பூரணி, இந்தத் தோசைக்குத்தான மாமாகிட்ட நீ அடி வாங்கின என்று எல்லோரும் கேட்கும்படி சொல்லி, அதன் பின்புலக் கதையையும் விளக்க ஆரம்பித்தான். ‘மதினி சின்னப் பிள்ளைல இருந்தே எந்த ஹோட்டல்ல என்ன நல்லா இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க என்ற கேலியும் அதைத் தொடர்ந்த ‘கொல்லென்ற எல்லாரது சிரிப்போடும் போனது பூரணியின் உணவு குறித்த ஆர்வப் பேச்சு.
இன்றைய நாளைப் போல இப்படித் தனியே வந்து உணவகத்தில் சாப்பிட வாய்ப்புக் கிடைத்ததெல்லாம் பெரும் விந்தை. அதை நல்கிய துக்க வீட்டுக் கதாநாயகர் வைகுண்டம் ஏக மனதில் வாழ்த்திக் கொண்டாள் பூரணி. உணவுப்பட்டியலில் தொப்பி தோசையின் பெயரைத் தாண்ட மறுத்தன கண்கள்.
இப்போது ஒரு தொப்பி தோசை வரவழைத்துச் சாப்பிட்டால், வைராக்கியங்கள் ஏதும் இல்லாது போன, ஒரு சப்பென்ற முடிவாகி விடாதா என்று ஒரு நிமிடம் தீவிரமாகவே கவலை கொண்டாள். அடுத்த நிமிடம் உதடுகள் விரிய புன்னகையோடு, ‘ஆனால் ஆகட்டுமே என்று நினைத்துக் கொண்டு சிப்பந்தியை அழைத்தாள். தொப்பி தோசை வரவும் ஒருமுறை தலையில் எடுத்து வைத்துப் பார்த்து விட வேண்டும். கோமாளி போல இருப்போமோ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு மறுபடி பெரிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

2018-04-09

சப்பரம்


‘நீயும் ஒந்தங்கச்சியும் நொச்சுனீங்கன்னுதான காட்டை வித்தாரு. இப்ப அரும்பாடு படுற தோட்டத்தையும் விய்யின்னா எப்பிடிய்யா? ஒங்க அய்யா சம்மதிப்பாரா?’

‘காட்டை வித்து காக்காசு கையில நின்னுச்சா? உன் மகளுக்குப் பங்கு, கடனக் கட்டுனதுன்னு போக மிஞ்சுனதையும் இந்த தோட்டம் தின்னுட்டுப் போயிரும் போல’
தோட்டத்திலிருந்து திரும்பி, அங்கணத்தில் கை கழுவிக் கொண்டிருந்த அழகர்சாமிக்கு, அடுப்படியில் கேசவன் அவன் அம்மாவோடு சத்தம் பிடித்துக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. திண்ணையிலேயே துண்டை உதறி உட்கார்ந்தார்.
காட்டை விற்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு திருவிழாவும் கடந்து போனது. தேர்த்திருவிழாவின்போது கை வலிக்க வலிக்க கடலையும் பருத்தியும் தேர் மீது சூறை போட்ட நாட்களெல்லாம் கனவென்று போயின.
‘அவருக்கு நேர் மூத்தவரு, பிள்ளைக கேட்டதும் வித்துக் குடுத்தரா இல்லையா? இவருதான் வீம்பு பிடிச்சு இன்னும் தோட்டத்தைக் கட்டி அழுகுறாரு’
‘கொஞ்சம் பொறுடா, அய்யாட்ட பதமாப் பேசுவோம்’
‘இன்னுமெல்லாம் என்னால மண்ணைக் கிண்டிக்கிட்டிருக்க முடியாது. ஊர்ல ஒருத்தன் இல்ல…எல்லாம் கெளம்பி துபாய், மஸ்கட்டுன்னு போய்ட்டானுக. ரவியண்ணண்ட்ட சொல்லி வச்சிருக்கேன். ஏஜண்ட்டுக்கு நாலு லச்சம் கட்டணும். நானும் வெளிநாடு போறேன்’
சொல்லிக் கொண்டே உரச்சாக்குடன் கோபமாக வெளியில் வந்தவன், திண்ணையிலிருந்த அய்யாவைப் பார்த்து சட்டென நின்றான். அழகர்சாமி குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தார். கேசவன் தயக்கத்துடனே டிவிஎஸ் வண்டியில் ஏறிக் கிளம்பினான்.
பின்னாலேயே வந்த அவன் அம்மாவும் அவரைப் பார்த்துத் தயங்கி, பின் தேய்ந்த ஒலியில் பேசினாள்
‘அவஞ்சொல்றதும் சரிதான! மருமக நகை பத்து பவனும் பேங்குல கெடக்கு. பேறுகாலம் முடிஞ்சு அவ வர முன்ன ஒத்தச் சங்கிலியவாச்சும் திருப்பணும்’
அழகர்சாமி ஒன்றும் பேசவில்லை. மெதுவாக எழுந்து, செருப்பைப் போடக் கூட தோன்றாமல், ‘இந்தா வந்துர்றேன்’ என்றபடி நடக்க ஆரம்பித்தார்.
‘சாப்பிட்டுப் போறது…’ என்ற மனைவியின் சொற்கள் அவரைச் சென்றடையவே இல்லை.
கால்கள் தானாக தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தன. ஊரைக் கடந்ததும், விற்று அழித்த காடுகள் வழி விட்டன. சில வருடங்களுக்கு முன்பு மல்லிகைப் பூந்தோட்டங்களாக மணந்த ஊர். அழகர்சாமி சிறுவனாக இருக்கும்போது, அருப்புக்கோட்டையிலிருந்து மாட்டு வண்டியில் வந்தால், ரயில் பாதை தாண்டியதில் இருந்து மல்லிகை மணக்க ஆரம்பிக்கும். பாலையம்பட்டி தொடும் வரை பூந்தோட்டங்கள்தான். மதுரை மல்லி என்பதே எங்க ஊர் பூதான் என்று பெருமை பேசிக் கொள்ளும் ஊர். எல்லாருடைய தோட்டங்களிலும் இருந்து வந்து குவியும் பூக்களால், திருவிழா மண்டகப்படியின்போது பெருமாள் பூமாலைகளில் முங்கி, பூப்பல்லக்கில் ஒய்யாரமாக அசைந்து அசைந்து வருவார். இப்போதெல்லாம் பெருமாளுக்கு பல்லக்கு நிறைய வேண்டுமானால், வெளியிலிருந்துதான் பூ வர வேண்டும்.

பாலையம்பட்டியை அடுத்த யூனியன் ஆபீஸ் வட்டாரம் விரிவடைந்து, நிலத்தின் விலை கூடக் கூட ஒவ்வொரு தோட்டமாக விழுங்கி வளர்ந்தது. விளைச்சலுக்கும் செலவுக்கும் கட்டுபடியாகமலும், கூலிக்கு ஆள் கிடைக்காமலும் திண்டாடிய தோட்டக்காரர்கள் வரிசையாக தோட்டங்களை விற்க, அழகர்சாமியும் முக்கு வீட்டுக்காரரும் மட்டுமே வீம்பாக விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணன் தோட்டத்தைக் கடந்து தன் தோட்டம் விரைந்தார். அண்ணன் இவரை விடப் பாட்டாளி. முழித்திருக்கும் நேரமெல்லாம் மண்ணைத்தான் கிண்டிக் கொண்டிருப்பார். தோட்டம்தான் அவர் சீவன். மஞ்சள் பெயிண்ட் அடித்த கற்கள் ஊன்றிய அவ்விடத்தை நிமிர்ந்து பார்க்கவும் மனசு கேட்கவில்லை. மிளகாய்ச்செடியும் கனகாம்பரமும் மழையில்லாமல் வதங்கிப் போய் நிற்பதைப் பார்த்தாலே எந்த சம்சாரிக்கும் ‘கெதுக்’கென்று இருக்கும். சோறு இறங்காது. அப்படியிருக்க, நாளெல்லாம் அரும்பாடு பட்ட தன் தோட்டத்தை வீட்டு மனையாகப் பார்த்ததில் மனசொடிந்து விழுந்த மூத்தவர்,  தோட்டத்தை விற்ற மூணாம் மாதம் போய்ச்சேர்ந்து விட்டார்.
தன் தோட்டத்தையும் மனையாக நினைத்துப் பார்க்கையிலேயே பகீர் என்று இருந்தது. சிறுவனாக இருக்கும்போதிலிருந்து பாடுபட்ட தோட்டம். காலை நாலரை மணிக்கு பெண்டுகளும் ஆட்களுமாக பூப்பறிக்க ஆரம்பித்தால், ஆளாள் பறித்ததற்கு எடை போட்டு, ஈரச்சாக்கில் கட்டி முடிக்க மணி ஆறரை ஆகிவிடும். தோட்டம் முழுக்க மல்லிப் பூச்செடிகள்தான். கொஞ்சமாகக் கனகாம்பரமும், காய்கறிகளும், வீட்டுத் தேவைக்கு மட்டும் நெல்லும்.
குளிர்ந்து கிடந்த பம்புசெட்டு அருகில் நின்ற வேப்ப நிழலில் போய் உட்கார்ந்தார். அழகர்சாமியும் அவர் அண்ணனுமாகப் முறை வைத்து நீர் பாய்ச்சிக் கொண்ட கிணறு. ‘முனிப்பாய்ச்சல் இருக்க கெணறப்பா, நேரங்கெட்ட நேரம் அங்கிட்டுப் போகாதீங்க’ என்று ஊரில் எச்சரிக்கை இருக்கும். இரவு 12 மணிக்கு முனியப்பன் கிணற்றில் குளித்து முடித்து, ஒரே தவ்வில் கிணற்று மதிலில் வந்து நின்று, ஈரத்தலையைச் சிலுப்புவாராம். அந்தத் தண்ணீர் தெறிக்கும் இடம் பட்டுப் போகுமாம். மனிதர் மீது பட்டால் பரலோகம்தான்.
அழகர்சாமியின் அய்யா வாழைத்தோட்டக் காவலுக்குப் போய் ராத்தங்கியவர், தோட்டத்திலேயே கை,கால் விழுந்து, கிடந்து போய்ச்சேர்ந்ததில் முனி விளையாட்டுதான் குற்றஞ்சாட்டப்படது. நாளைக்கு ப்ளாட் போட்டு விட்டால், முனியப்பன் எங்கு போவாரோ! இல்லை, வருசத்தில் முக்கால் வாசி நாள் தண்ணி வத்திப் போன கிணத்தில் முங்கிக் குளியல் போட முடியாமல் ஏற்கனவே இடம் மாறிப் போனாரோ என்னவோ.
துண்டைச் சும்மாடாகச் சுருட்டி தலைக்கு வைத்து மல்லாந்து படுத்தார் அழகர்சாமி. தென்னைமரம் ஓலையை அசைத்துச் சிரித்தது. இனி இந்த நிழல் வாய்க்காது. உழைப்பு வாய்க்காது. மனசை நிறைக்கும் பூமணமும் இந்தப் பச்சையும் வாய்க்காது.
பாலையம்பட்டிச் சம்சாரிகளுக்கு வடக்கே போக பூஞ்சப்பரம்தான். மூங்கிலில் மிகப் பெரிதாகக் கட்டப்பட்டு, பூச்சரங்கள் சூழ்ந்த சப்பரத்தில், உட்கார்ந்த கோலத்தில் ‘இல்லை இல்லை’ என்று தலையாட்டியபடியே பூக்கள் வீசப்படும் வழியில் போய்ச்சேருவார்கள். தனக்கு கட்டப்படும் இறுதித் தேரில் தன் தோட்டத்திலிருந்து ஒரு மொட்டு கூட இருக்காது என்று கண்களை மூடி நினைத்துக் கொண்டார். பலமாக வீசிய வேப்பமரக் காற்றில் மல்லிகைப் பூ மணத்துக் கிடந்தது.