2015-02-19

பூத்து நிறையும் செண்பக வாசம்


'அனிதாஎந்திரிச்சதுல இருந்து கதைப்புத்தகத்தைத் தூக்கி வச்சிட்டு உக்கார்ந்திருக்க...வந்து தோசையைச் சாப்பிடு. ஹாஸ்டல்ல என்ன உருப்படியா சாப்பிட்டிருக்கப் போற?'

அடுப்படியில் இருந்து அம்மா கூப்பிட்டார். அதிகாலையில் 'வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தியவள்' என்று ஆரம்பித்த தெருவின் ஒலிபெருக்கி, ஊதாக் கலர் ரிப்பனைக் கூவியழைத்து திருவிழா மனநிலையை வலிந்து உருவாக்க முயன்று கொண்டிருந்தது.

புத்தகத்தைப் புரட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன்.

'சாப்பிட்டுட்டுப் பெரியம்மா வீடு வரை போகணும். மாவிளக்குக்கு மாவு இடிச்சு வைக்கிறேன்னு சொல்லுச்சு. போய் வாங்கிட்டு வந்துரு'

'ம்ம்ம். செண்பகா அக்கா வருதா திருவிழாவுக்கு?'

'அக்கா இங்கதான் இருக்கு. போனதடவை நீ ஹாஸ்டலுக்குப் போன ரெண்டு நாள்லயே வந்திருச்சு. அவங்க வீட்ல பெரிய பிரச்சனை. இனி சேர்ந்து வாழ முடியாதுன்னு அனுப்பிட்டாங்க'

'என்னம்மா சொல்ற? பிரச்சனையா?  நல்லாதான இருந்தாங்க?'

'ஆமா...குழந்தை இல்லன்னு காரணம் சொல்றாங்க'

'இது ஒரு காரணமா? கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தான ஆகுது? அதுவும் இப்போ எவ்வளவு ட்ரீட்மெண்ட்ஸ் வந்துருச்சு?'

'இல்லம்மா, எதுக்கும் வழி இல்லை. அக்காவுக்கு கர்ப்பப்பைல ஏதோ பெரிய பிரச்சனையாம்'

'என்னம்மா இது? அப்படியே இருந்தாலும் குழந்தைதான் வாழ்க்கையா? செண்பாக்கா மாமா ரொம்பப் பாசமா இருந்தவர்தானே?'

'எல்லாம் மாறிப்போச்சு. குழந்தை பிறக்காதுன்னதுமே கடுசா நடக்க ஆரம்பிச்சுட்டான். 'கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்'ன்ற மாதிரி நிறையப் பேசி, அவனைக் கல்யாணம் பண்ணத் தயாரா இருக்க பொண்ணைக் காமிச்சு மனசை மாத்திட்டாங்க'

எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. செண்பா அக்காவை வேண்டாம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? முகமெல்லாம் புன்னகையும் கொஞ்சமும் கபடம் இல்லாத பாசமுமாக அன்பைப் பொழியும் ஒருத்தியையும் வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு என்ன இழக்கிறோம் என்று புரிந்திருக்குமா?

'திருவிழா முடியவும் பெரியவங்களை எல்லாம் கூட்டிட்டுப்போய் அவங்க வீட்ல பேசணும்னு அப்பாவும் பெரியப்பாவும் முடிவெடுத்திருக்காங்க. பெரியம்மாதான் அழுது ஓயுது'

அம்மா சொல்லிக்கொண்டே போக எனக்கு மனது முழுக்கக் கசந்து வந்தது.

அக்காவை எப்படி எதிர்கொள்ள என்று புரியாமல் மெல்ல 'பெரிம்மா' என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன். மலர்ந்த புன்னகையுடன் அக்கா வெளியே ஓடி வந்தாள்.

' அனிதா, எப்போ வந்த ஹாஸ்டல்ல இருந்து? சாப்பிடுறதே இல்லையா? ரொம்பப் படிச்சு இளைச்சுப் போயிட்ட' என்று இயல்பாகக் கேட்டுக்கொண்டே என்னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த அக்காவின் கைகளில் என் கைகள் உணர்ந்த வெம்மையில் மனம் லேசாகியது.

வானம் மெல்ல இருட்டத்தொடங்கிய பொழுதில் நையாண்டி மேளமும் உருமியும் சன்னமான ஒலியாகக் கேட்கத் தொடங்கியது. மாவிளக்கு ஊர்வலம் தொடங்கியாயிற்று.

'அடுத்த தெருவுக்கு வந்துட்டாங்க போல. மாவிளக்கை ஏத்தித் தாம்பாளத்தைக் கையில் எடுத்துக்கோ. செண்பா கூடவே போய் கோவில்ல இறக்கி வை. நான் பின்னாடியே பொங்கல் வைக்க சாமான் எல்லாம் எடுத்துட்டு வந்துர்றேன்'

தட்டை எடுத்துக் கொண்டு ஊர்வலத்தின் கடைசியில் சேர்ந்து நடக்கத் தொடங்கியதும் அக்காவை எதிர்பார்க்கத் தொடங்கியது மனது. எப்பொழுதும் மிகை குதூகலம் மட்டுமே இருக்கும் இந்தத் தருணத்தில் இன்று மனது ஒரு திகைப்புடனே அலைபாய்ந்தது.

செண்பா அக்காவின் தெருவில் நுழையவும், அக்கா மாவிளக்குத்தட்டோடு வீட்டிலிருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது. பாசிப்பச்சைப் பட்டில் , மாவிளக்கின் ஒளியில் அக்காவைப் பார்க்கவும் மனதிலிருந்த நெருடலெல்லாம் சட்டென விலகி பெரும் பரவசம் ஆகியது.

ஓர் அதிகாலைப் பொழுதில், மூக்குத்தியின் பேரொளியுடன், வாஞ்சையாக அணைத்துக் கொள்ளும் நேசச் சிரிப்புடன் நின்றிருந்த கன்னியாகுமரி தேவியின் ஏகாந்த தரிசனத்தின்போது இருந்த பரவசத்திற்கு சற்றும் குறையாததொரு மனநிலை.

சட்டென கவனம் ஈர்க்கும் அழகு இல்லை அக்காவுக்கு. மாநிறமும், திருத்தமான முகமும், அனைத்திற்கும் மேல் சட்டென மலரும் தெற்றுப்பல் சிரிப்புமாக, எனக்கு எப்போதுமே அக்கா தேவதைதான்.

'முளைப்பாரி போடுங்கம்மா முத்துமாரியைப் பாடுங்கம்மா 
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை
தானானை தானானை தானானை தானானை'

முளைப்பாரியைச் சுற்றிக் கும்மியடித்துக் கொண்டிருந்த பெண்களைக் கடந்து கோவிலில் மாவிளக்கை இறக்கி வைத்துப் பூசைக்கு நின்றோம். பூசாரி தந்த குங்குமத்தைப் பூசிக்கொண்டு அக்காவைப் பார்க்க, அவள் வெகு சிரத்தையாய் வகிட்டில் குங்குமம் இட்டபின் தாலியிலும் இட்டுக்கொண்டு கண்ணில் ஒற்றித் தழையவிட்டாள்.

கும்மியை வேடிக்கை பார்க்க வாகான இடம் பார்த்து நின்று கொண்டோம். அக்காவிடமிருந்து பிரசாதம் வாங்கும்போது ஒரு பார்வை பார்த்து விட்டு,பெருமூச்சை மறைத்துக் கொண்டே அக்காவிடம் சொன்னேன்.

'அக்கா, அப்படியே மீனாட்சியம்மன்எந்திரிச்சுநடந்து வந்த மாதிரி இருக்க.கிளியும் கிரீடமும்தான் இல்லை. நானே கண்ணு வச்சிட்டேன் போ'

'அப்படியா?? அப்ப இப்படியே போய் உங்க மாமாவை மயக்கிக் கூட்டிட்டு வந்துருவமா??'

சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்க, விக்கித்துப் போய், செய்வதறியாது அசட்டுத்தனமாக நானும் சிரிப்பில் கலந்து கொண்டேன். மேளமும் உருமியும் போட்டியிட்டு ஒரு தீவிரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

அதன் பின்னான ஏழு மாதங்களில், பேச்சுவார்த்தைகளெல்லாம் தோற்றுப் போய் அக்காவுக்கு விவாகரத்து ஆகிவிட்டிருந்தது. அதுவரை விடுமுறையில் வந்திருந்த போதெல்லாம் அவள் வீட்டிற்குப் போவதைத் தவிர்த்து வந்தேன். பெரியம்மாவின் அழுகையும் புலம்பலும் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் ஒரு தைரியத்தோடு அக்காவைப் பார்க்கக் கிளம்பினேன்.

வீட்டில் அக்கா மட்டும் சமைத்துக் கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டே போய்ப் பக்கத்தில் நின்றதும் துளியும் மங்காத அற்புதப் புன்னகை என்னை அள்ளிக் கொண்டது.

நலம் விசாரிக்கும் அக்காவின் பேச்சில் கலக்கமெல்லாம் மறந்து தற்செயலாகவோ வலியவோ அவள் கழுத்தில் பார்த்தேன். சாதாரணச் சங்கிலி செண்பா அக்காவை மேலும் அழகாக்குமாறு அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது.






கனா கண்டேன் தோழீ நான்!

'ஓட்ஸ பால்ல போட்டுக் குடிச்சா இன்னும் கொஞ்சம் வெய்ட் தான் போடும். மெலியனும்னா மோர்ல கரைச்சு குடிக்கணும்'

நான் கேஃபெடேரியாவில் நுழையும்போது வித்யாவிடம் ரதி சொல்லிக்கொண்டிருந்தாள். . எனக்கு ஒரு தேனீரை வாங்கிக்கொண்டு வித்யாவின் அருகில் போய் அமர்ந்தேன்.

மென்பொருள் நிறுவனம் என்றவுடனே நுனி நாக்கு ஆங்கிலம், விரித்துப்போட்ட தலை, மேற்கத்திய உடைகள், எதிலும் ஒரு அலட்சியம் என ஒரு காட்சி எல்லோருக்கும் விரியும். மதுரை என்றாலே வீச்சரிவாளும் தாவணியும் கண்முன் வருவதைப் போல. தஞ்சாவூர், நெல்லை, மதுரைப் பக்கமிருந்து வந்து, வட்டார வழக்கு கூட மாறாத மொழியில் பேசிக்கொண்டு, நெருக்கியடித்த படுக்கைகள் நிறைந்த விடுதிகளிலோ, சென்னையில் ஆகக் குறைந்த வடகையில் கிடைக்கும் வீடுகளிலோ தங்கிக் கொண்டு, உழைப்பை உறிஞ்சுவதில் அசுரத்தனமாக முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் இரவு பகலாக உட்கார்ந்து முதுகொடிய வேலை பார்த்துக்கொண்டு, சம்பளம் வந்தவுடன் படிப்புக்கு வாங்கிய கடனுக்கோ, அப்பா வாங்கிய கடனுக்கோ பணத்தை அனுப்பிக் கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பேர். ஊர் வழக்கங்களையும் மறக்க முடியாமல், நகர பழக்கங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலைதான் இவர்களுக்கு இருக்கும். நான், வித்யா, ரதி மூவருமே இந்த வகைதான். அதனாலேயே ஒன்று சேர்ந்தோமோ என்னவோ.....

உடல் பருமன் குறைப்பது பற்றி தினம் இரண்டு குறிப்புகளாவது எங்கள் பேச்சில் அடிபடும். வித்யா எப்படியாவது பதினந்து கிலோ குறைந்து விடுவதில் வெறியாக இருந்தாள். சென்ற வாரம் அவளைப் பெண் பார்க்கும் படலம் நடந்த பிறகு தான் அத்தனையும்.

'நான் குண்டா இருக்குறதுதான் காரணம்னு சொல்லி மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டாராம். அப்பா 'கொஞ்சம் மெலிய ட்ரை பண்ணும்மா'னு சொன்னார். போன தடவை வந்த மாப்பிள்ளை கருப்பா இருக்கதால வேணாம்னு சொன்னான். அதுக்கு என்ன பண்றது? 'கருப்பா இருந்தாலும் களையாவாவது இருக்கணும்ல?'னு மாப்பிள்ளை அம்மா கேட்டாங்களாம். ஏதாவது பழமொழி சொல்லிட்டு போய்டறாங்க.....என்ன செய்றதுன்னு தெரியாம நாம முழிக்கிறோம். நிறத்தையும் அழகையும் ஒண்ணும் பண்ண முடியாது...அட்லீஸ்ட் வெயிட்டயாவது குறைக்கலாம்னு பாக்குறேன். அப்பா திருப்திக்காகவாவது.....'

வித்யா சொல்லும்போது என்ன பதில் சொல்லவென்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் யாரும் அவளை விட அழகாய் இருந்து விடவில்லை. இவளை விட ஏழு வயது வித்தியசத்துடன், முப்பது வயதிலேயே நாற்பது வயது தோற்றம் கொண்டுதான் இருந்தனர்.

'ஃபோட்டோ பாத்துட்டு தானடி பொண்ணு பாக்க வராங்க?' என வருத்தத்துடன் கேட்டேன்.

'நேர்ல இன்னும் பெட்டரா இருக்கும்னு வந்தோம்னு சொல்றாங்கடி.....எனக்கு வெறுத்துப்போச்சு. என்னை விட ரொம்ப கம்மியா சம்பளம் வாங்கினாலும் பரவயில்லை, மாப்பிள்ளைனு ஒருத்தன் கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு அப்பா இப்போ இறங்கி வந்துட்டார். தங்கச்சி மட்டும் இல்லைனா 'போங்கடா நீங்களும் உங்க
கல்யாணமும்'னு போய்டுவேன்'

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு படித்து எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் இந்த ஆதி கால பிரச்சனையில் வந்துதான் நிற்க வேண்டி இருக்கிறது.

மறு நாள் வித்யா மிக சோர்வாக இருந்தாள். மெலிகிறேன் பேர்வழி என்று அண்ணா சாலையில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு, கோடம்பாக்கத்தில் இருக்கும் அவள் விடுதியில் இருந்து நடந்தே வந்திருக்கிறாள். அதிர்ந்து போன நானும் ரதியும் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. இரவு விடுதி திரும்ப ஒரு மணி ஆனலும் மறு நாள் நடந்துதான் வந்தாள். ப்ரொஜெக்ட் மேனேஜரே கூப்பிட்டு 'ஆர் யு ஒகே? ரொம்ப டல்லா தெரியுறீங்க....வேணும்னா ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்க....அடுத்த மாசம் முக்கியமான ரிலீஸ் எல்லாம் இருக்கு' என்று சொல்லும் அளவு படு வேகமாக மெலிந்து கொண்டிருந்தாள். அவள் உடல்ந்லம் என்ன ஆகுமோ என்று நாங்கள் புலம்பியதுதான் மிச்சம்.

ஒரு நாள் மாலையில் வித்யா பரபரப்பாக என்னிடம் வந்தாள்.

'சுபா, உங்கிட்ட ஃபேஸ் வாஷ் க்ரீம், ஃபேர்னஸ் க்ரீம் இதெல்லாம் இருக்கா?' என்று கேட்டாள்.. யாரோ மாப்பிள்ளையின் அம்மாவும் அக்காவும் அலுவலக ரிசப்ஷனில் வைத்து பெண் பார்க்கப் போகும் அதி புத்திசாலித்தனமான யோசனையுடன் வருகிறார்களாம்.

பக்கத்து இருக்கை வினயாவிடம் இருந்து எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பதினைந்து நிமிடம் நேர்முகத்தேர்வு போல் அவர்களிடம் பதில் சொல்லி விட்டு வந்திருக்கிறாள்.
மறு நாள் அவள் முகத்தைப் பார்த்தே முந்தைய நாளுக்கான தேர்வு முடிவு தெரிந்து விட்டதால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

சில நாட்கள் கழித்து முன்பை விட சோர்வாக வந்தாள்.

'மார்கழி மாசம் இல்லயா? அதான் கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன். ஆண்டாள் திருப்பாவை பாடித்தான் பெருமாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அதனால
அம்மா மார்கழி மாச விரதம் இருக்க சொல்லி இருக்காங்க...தினமும் காலையில 5 மணிக்கு ஃபோன் பண்ணி எழுப்பி விட்றாங்க. அதுலயும் 'சிற்றஞ்சிறுகாலே'னு ஒரு பாசுரம்....அத தினமும் பாடினா நிச்சயம் மாப்பிள்ளை அமையுமாம்'

எனக்கு அயர்ச்சியாய் இருந்தது. அவள் என்ன மனநிலையுடன் இதைச் சொல்கிறாள் என்று கூட என்னால் ஊகிக்க முடியவில்லை. அலுவலகத்தில் வேறு ஒரு
ப்ரொஜெக்ட் முக்கியமான கட்டத்தில் போய்க்கொண்டு இருந்தது. சனி, ஞாயிறுகளில் கூட வந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தோம். வேலை, விரதம், நடை எல்லாம் சேர்ந்து வித்யாவை ஒரு வழி செய்திருந்தது.

மார்கழி மாதம் முடிந்திருந்த ஒரு வாரத்தில் அழகு நிலையம் செல்ல என்னைத் துணைக்கு அழைத்தாள் வித்யா. அடுத்த படலம் என அவள் சொல்லாமலேயே எனக்குத் தெரிந்து விட்டது. புருவம் திருத்தி, ஃபேசியல் செய்து ஒரு 1000 ரூபாயை அழுது விட்டு வந்தாள். வெள்ளிக்கிழமை அவள் ஊருக்குக் கிளம்பியதில் இருந்து திங்கட்கிழமை காலையில் அவளைப் பார்க்கும் வரை நானும் ரதியும் அவளைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்தோம். எத்தனையோ தடவை அவள் பொம்மை போல மாப்பிள்ளைகளின் முன் நின்றிருக்கிறாள். ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? வேலையில் அவள் திறமையைப் பற்றி ப்ரொஜெக்ட்ல் எல்லாருமே பாராட்டும் பொறாமையுமாய்ப் பார்ப்பார்கள். நிறைய முறை பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் விருதுகள் வாங்கி இருக்கிறாள். எதுவுமே திருமண சந்தையில் எடுபடவில்லை. மூளை, இதயம் என்பதெல்லாம் திருமணத்திற்குத் தயாராகும் பெண்களுக்கு இருப்பதில்லை என்றே கொள்ளப்படுகிறது.

'நீ வேற, என் வேலையை மதிச்சுதான் ஃபோட்டோ பாத்த அப்புறமும் பொண்ணு பாக்க வர்றாங்க. வேலையும் இல்லன்னா நான் ஒளைவையார்தான்' என சிரிப்பாள் வித்யா.

திங்கள் காலையில் முகம் கொள்ளா பூரிப்புடன் வந்தாள் வித்யா. வந்தவுடன் காஜூ கத்லி டப்பாவை நீட்டினாள்.

ரதி பறந்து கொண்டு கேட்டாள்....'என்னடி, சக்ஸஸா?'

'ஆமா ரதி.....பூ வச்சிட்டுப் போய் இருக்காங்க. அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், அப்புறம் 2 மாசத்துல கல்யாணம். மாப்பிள்ளை பேங்ளூர்.....நான் ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணனும்'

எனக்கு அவளைக் கட்டிக்கொண்டு தூக்கி சுற்ற வேண்டும் போல் இருந்தது.

'ரொம்ப ரொம்ப சந்தோஷம் வித்யா.....அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க இல்ல?'

'ம்...ஆமா....அம்மா வேண்டிக்கிட்ட கோவிலுக்கெல்லாம் நேர்த்திக்கடன் முடிக்க கிளம்பி இருப்பாங்க இந்நேரம். நான் மார்கழி மாசம் விரதம் இருந்ததுதான் இந்த வரன் முடியக் காரணம்னு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு இருக்காங்க....அப்பாவோ நான் அவர் பேச்சைக் கேட்டு உடம்பை குறைச்சதுதான் காரணம்னு சொல்லிட்டு இருக்கார்.
இது எதுவுமே காரணம் இல்லனு அவங்களுக்குத் தெரியல'

'வேற என்னடி?'

'இத்தனை நாள் வரதட்சணை லிஸ்ட்ல இல்லாமல் இப்போ புதுசா சேர்ந்து இருக்கிற 4 லட்ச ரூபாய்தான் காரணம். மாப்பிள்ளை வீட்ல அத சான்ட்ரோ காரா வாங்கி குடுக்க சொல்லிட்டாங்க......கருப்பு கலர்ல வேணுமாம்'


சொல்லிவிட்டு அடக்க முடியாமல் சிரித்த அவளை நாங்கள் விக்கித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.