2015-03-06

நாடும் நாட்டு மக்களும்...

அன்று மகா என்கிற மகாலட்சுமி காணாமல் போன இரண்டாவது தினம். நானும் அவளும் ஒன்பதாம் வகுப்பு. அவள் ஆங்கில வழிப் பிரிவு. அவ்வளவாகப் பழக்கமில்லை. என் நெருங்கிய தோழி ஒருத்தி அவள் வகுப்புத் தோழி என்றளவில் கூடைப்பந்து விளையாடும் மகாவைக் கடந்து என் மிதிவண்டியை எடுக்கச் செல்கையில் மெலிதாகப் புன்னகை பரிமாறிக் கொள்வோம், அவ்வளவே. அவளைக் காணாமல் வீட்டில் தேட ஆரம்பிக்கும்போது, வீட்டுக்கு வரும் வழியில், ஆளரவமற்ற ஓர் இடத்தில் அவள் சைக்கிள், புத்தகப் பை எல்லாம் சிதறிக்கிடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்பொழுதும் போல 'எவன் கூடயாவது ஓடிப் போயிருப்பா' பேச்சுகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த இரண்டாவது தினத்தில் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையிலேயே பள்ளி விடுமுறை விடப்பட்ட செய்தி முன்னும், மகாவின் உடல் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி பின்னுமாக வந்தது. உடல் மேலெடுக்கப்பட்டு, விஷயம் முழுதாகத் தெரியும் வரை அதிர்ச்சியாக மட்டுமே இருந்தது. நம் நாட்டின் வழக்கம் போல, இறந்த உடலுக்கான எந்த மரியாதையும் இன்றி, மறுநாள் செய்தித்தாளில் மகாவின் படம் வெளியிடப்பட்டிருந்தது. தலைப்பே, பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை முகத்திலறைந்து கூறியது. பள்ளிச் சீருடை சிதைக்கப்பட்டும் உடலெல்லாம் சிகரெட் சூடு வைக்கப்பட்டும் இருந்ததாக செய்தியும். உண்மையில் சொல்கிறேன், இதை இப்பொழுது எழுதும்போதும் மனமெல்லாம் நடுங்குகிறது, இன்னும் அப்படம் கண்ணை விட்டு மறையவில்லை. தெற்றுப்பல் சிரிப்புடனான மகாவை அப்படிப் பார்த்தது கடும் மனவேதனை.

சிற்றூரான எங்கள் ஊர் முழுவதும் அதிர்ந்து போனது. இருபத்தைந்து வயதுக்குட்பட்ட நான்கு குற்றவாளிகளையும் எளிதில் பிடித்து விட்டனர். அவர்கள் பாலியல் வன்முறைக்குச் சொன்ன காரணம் இதுதான்...

'மகாவும் அவள் அக்காவும் நடந்து செல்லும்போது அடிக்கடி கிண்டலடித்தோம். மகா ஒருநாள் கோபப்பட்டுத் திட்டிவிட்டாள். அழகாக இருந்ததால் அவளை அடைய ஆசையும் வேறு சேர்ந்து, இந்த தண்டனையைத் தேர்ந்தெடுத்தோம்'

படுமோசமான நிகழ்வு. ஆனால் இதெல்லாம் நடந்தது இன்க்ரெடிபில் இந்தியாவில் அல்லவா?! MLAவின் சாதிக்காரன் ஒருவனும் குற்றவாளியாக இருக்க, அவர் தலையீட்டால் எளிதில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்து விட்டனர் அனைவரும். வெகுண்டெழுந்த மகாவின் சாதியினர் போராட்டங்களில் இறங்க, கிட்டத்தட்ட சாதிப் பிரச்சனையாக வெடிக்க இருந்தது நல்லகாலமாக குறிக்கோளில் வழுவாது பிழைத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட, குற்றவாளிகள் மறுபடி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளி மறுபடி ஆரம்பிக்கப்பட்டது. எல்லா மாணவிகளின் வீடுகளிலும் கடும் அறிவுரைப் படலம் நடந்தது. ஒரே உள்ளீடுதான். 'கவனமாக இருந்துக்கணும், யார் என்ன கிண்டல் பண்ணாலும் பேசாம வந்துரணும்'. என் ஆசிரியை ஒருவர் 'பாத்து இருந்துக்குங்கப்பா...அந்தப் பிள்ளை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுச்சோ' என்று கண்ணில் நீர் வழிய சொல்லிக்கொண்டிருக்க, நாங்கள் எல்லாம் பேயறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

அதன் பின் எல்லா மாணவிகளையும் ஒன்றிணைத்து மடத்தனத்தின் உச்சமான,கேவலமான கட்டளைகள் இடப்பட்டன.
"யாரும் பள்ளிக்குப் பூ வைத்துக் கொண்டு வரக்கூடாது. துப்பட்டாவில் இனி 3 பின்களுக்குப்பதில் 6 பின்கள் குத்திக்கொள்ள வேண்டும், அலங்காரமான கம்மல் எல்லாம் போடக்கூடாது" போன்றவை. மொத்தத்தில் மட்டமான தோற்றத்தோடு மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும், அகோரமாக வர முடிந்தால் மிக நல்லது. நாங்கள் ஒன்றும் விளங்காமல் பேஸ்தடித்துப் போய் இருந்தோம். 'கரி ஏதாவது பூசிக்கிட்டு வருவோம்' என்று பேசிக்கொண்டிருந்தோம்.

இந்த கட்டளைகளுக்குக் காரணமூலம் ஒரே முடிவுதான். அந்தக் கொடூரமான பாலியல் வன்முறைக்குக் காரணம் மகா அழகாக இருந்ததுதான். துப்பட்டாவில் கூடுதலாகக் குத்தப்படும் பின்களும் அழுது வடியும் தோற்றமும் சர்வ நிச்சயமாக யாரையும் பாலியல் வன்முறைக்குத் தூண்டாது.... எத்தனை கேவலம்?! ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி அப்போதே இதனைக் காட்டமாக எதிர்த்துப் பத்திரிக்கைகளில் பேட்டியளித்தார். பின்னாளில் அவரைச் சந்திக்க நேரிட்டபோது இதற்கும், அவர் கட்சியின் போராட்டத்துக்கும் நன்றி தெரிவித்தேன்.

மகா கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சி எடுத்துவிட்டு அரைமணி நேரம் தாமதமாகப் பள்ளியிலிருந்து சென்றது கூடத் தப்பென விமர்சிக்கப்பட்டது, 'பொம்பளைப் பிள்ளைகளுக்கு எதுக்கு இதெல்லாம்?!' 'பொறுக்கிப் பயலுகள்ட்ட போய் கிண்டலடிச்சதுக்குத் திட்டலாமா?' வகைக் கருத்துகள்.

மகா கொல்லப்பட்ட கொடூரத்தை விட, அவள்தான் அதற்குக் காரணம் என்பது போல் சொல்லப்பட்டவை எல்லாம் வேதனை.
"நீங்க பத்திரமா இருக்கணும்னா நீங்க பாத்து நடந்துக்கங்க. நம் சமூகம் இப்படிதான் இருக்கும்" என்ற கேடுகெட்ட வாக்கியம்தான் சரியாக விவரம் புரியாத அந்தச் சமயத்திலேயே சுழற்றி அடித்தது.

கீழ் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை தரப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் 7 வருடங்களாக அது குறைக்கப்பட்டு, என்னென்னவோ காரணங்களால், குற்றவாளிகள் 4 வருடங்களிலேயே வெளிவந்தாயிற்று. வழக்கு நடந்த காலமே 3 வருடங்கள். இத்தனைக்கும் மகா நல்ல வசதியான வீட்டுப்பெண்தான். தங்கள் பெண்ணுக்கு இப்படி நடந்ததில் முற்றிலும் இடிந்து போயிருந்தது அக்குடும்பம்.

அவ்வளவே...அக்குற்றவாளிகள் தற்போது மிக இயல்பான வாழ்வில்,..
என்ன ____ நியாயம் கிடைத்தது? வாக்குகளிட்டுத் தேர்ந்தெடுத்தவன் குற்றவாளியைக் காப்பாற்ற, கொடூர வன்முறையை எதிர்ப்பதற்கு பதில், அடிபட்டுக்கிடப்போரிடம் அறிவுரைகள் அள்ளி வழங்கும் சமூகம்.

இது நடந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னும் மேலும் மேலும் உயரும் பாலியல் வன்முறைகளும், பெண்களுக்குக் கிடைக்கும் இலவச கலாச்சார வகுப்புகளும்...மணிமகுடமாக, தான் பெண் என்பது தெரியக்கூட ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ள நேரிடும் சிறுமிகளும்...என்ன ஒரு பண்பட்ட தேசம்!!!

பெண்ணியம் என்ற சொல்லைக் கேட்டதுமே அமிலம் பட்டாற்போல் பதறும் கனவான்களே...பாலியல் கொடுமையை எதிர்ப்பதும் பெண்ணியம் பேசுதல்தான்.

இதோ, பெண்கள் தினம்...இந்த தினத்திற்கு நான்கு நாட்கள் முன்னர்தான் மகா வன்கொலை செய்யப்பட்ட தினம்.

தன் வீட்டுப் பெண்கள் தவிர அத்தனை பேரையும் மிகக் கேவலமான சொற்களால் விமர்சித்து அறிவாளியாகிக் கொண்டு, சற்றே தலைதூக்க எத்தனிக்கும் பெண்களை சொற்கள் வீசி வதைத்துக் கொண்டு, சுயம் என்பதே கூடாதென நொடிக்கொரு முறை அவளைக் குட்டிக் கொண்டு, காதலிக்க மறுத்தால் அமிலம் வீசிக்கொண்டு, பண்பாட்டுப் பெருமையும் தமிழினப் பெருமையும் பேசி முற்போக்கு முகமூடியுடன் இனிதே சொல்லுவோம்...

வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திரு நாடு!




No comments: