2015-03-11

அன்பே வெங்கடாசலம்!!

3 மணி நேரம் செலவழித்து ஒரு படம் பார்ப்பது எனக்கு ஆடம்பரமாகிப் போன இந்நாட்களில், நிறைய நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, பார்க்க வாய்ப்பில்லாமல் போன' பண்ணையாரும் பத்மினியும்' படம் குடும்பத்தோடு சென்ற ஒரு பயணத்தில் பார்க்கக் கிடைத்தது. 

அப்பா,அம்மா உட்பட எல்லாரையுமே ரசித்துப் பார்க்க வைத்த படம்.
பயணத்தின் பின்னான விழாவின் களேபரத்தில் இதை மறந்துவிட்டிருந்தாலும் படம் நெடுக வந்த ஒரு பாடல் மனதிலேயே இருந்தது. வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பின் அந்தப் பாடல் நினைவுக்கு வந்து ஒரு பின்னிரவு வேளையில் தேடி ஓடவிட்டுக் கேட்டேன். 

'ஒனக்காகப் பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகலிரவா'

என்று ஆரம்பித்த பொழுதில் உருக ஆரம்பித்து, நான்காவது வரியிலேயே,

'ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி'யில் கண் துளிர்த்துவிட்டது. 

இருமுறைகள் கேட்டபின் காட்சிகளோடு அந்தப்பாடலை யூட்யூபில் ஓடவிட்டேன். Just a wow!!! படத்தில் பார்த்திருந்தாலும் இவ்வளவு சரியாகக் கவனிக்கவில்லை. மகளைக் கட்டித்தந்த பின்னும் நேசம் நிறைந்து கமழும் ஒரு இணையின் பாடல்.அதை இத்தனை தூரம் ரசிக்கும்படி செய்திருந்ததற்கே பெரும் பாராட்டுகள். பாடலின் ஒவ்வொரு சின்ன அசைவும் அவ்வளவு அழகு!! ஜெயப்ரகாஷ் வழக்கம்போல படு அசத்தல் என்றால், அவரின் மனைவியாக நடித்தவரும் அவ்வளவு அழகான நடிப்பு!!

அன்றிரவு முழுக்க 15 தடவைகளாவது பாடலைப் பார்த்திருப்பேன். வாழ்வில் எந்தப் பாடல் காட்சியையும் தொடர்ந்து இத்தனை முறை ரசித்ததில்லை. இப்பாடலிலும் சரி, படத்திலும் சரி அன்புதான் அடிநாதம். உருக வைப்பதும் இப்பிண்ணனியே. இசையும், பாடகியின் அற்புதமான குரலும் கூட அடுத்துதான்.

சூது, வஞ்சனை, சுயநலம், தற்பெருமை என எத்தனை இருந்தாலும், எந்த ஒரு கலையும் அன்பைச் சித்தரித்தும், அன்புதான் பிரதானம் என்றும் அமைகையில் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. 99% classics இந்த வகைதான். பிழைப்புக்காக உழைத்து, சுயமரியாதைக்காகப் போராடித் திரியும் எந்த மனிதனுக்குமே மனதைக் கரைக்கும் அன்புதான் ஏக்கம் இல்லையா?! அதை மறுதலிப்பதாக தருக்கித்திரிந்தாலும் கூட?!

இன்னும் இந்தப் பாடல் ஓடிக்கொண்டே இருக்கிறது மனதில். சில நாட்களுக்கு முன்னான கீச்சு ஒன்று:

"அரிதாகவும் குறைவாகவுமே கிடைத்தாலும் நெடிய இந்த வாழ்வின் தேடல் அன்பில் கரையும் தருணங்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் வெறும் கானல் நீர்"

No comments: