நம்மிடையேயான இடைவெளி
உனக்கான வசதியாய் மாறத்தொடங்கும் நாட்களில்,
நம் நெருக்கத்திற்கான இழைகள்
நாமறியாமலே விட்டுக்கொண்டிருக்கும் வேளையில்,
அதை நீயும் நானும் உணரும் ஒரு தருணத்தில்,
எனக்கான வேண்டுகோள் ஒன்றுதான்....
கடைசி இழை விடுவதாய் இருந்தாலும்
அத்தனையையும் அதன் போக்கில் விடு...
என் அர்த்தமற்ற கேள்விகளையும்,
உன் தேடலில் கிடைத்த விளக்கங்களையும்
மொத்தமாய் இட்டு செயற்கைப் பூச்சிடுதல்
நம் இனிய உறவின் அழகை நிச்சயமாய்க் குலைத்து விடும்
சொல்லிக் கொண்டு வந்ததில்லை நம் அன்பு
சொல்லிக் கொள்ளாமலேயே பயணிப்பதே
சிறந்ததாய் இருக்கும்....
பாதை பரந்துள்ளதா, குறுகிற்றா என்று கூட
நின்று நிதானிக்க வேண்டாம்
எது நடந்தாலும் அது இயல்பாய் நிகழட்டும்...
ஒரு பூ உதிர்தல் போலவோ,
ஒரு மொட்டு மலர்தல் போலவோ
எதுவாயினும் அது இயல்பாய் இருக்கட்டும்...
உரத்துச் சொல்வதை உறுதியாய்த் தவிர்க்கலாம்...
ஏந்த அன்பையும் தக்க வைக்கத் தெரியாத என் பேதை மனம்
நொறுங்கிச் சிதறுதல் மௌனத்திலேயே கரையட்டும்...
No comments:
Post a Comment