நல்ல மழை நாள் ஒன்றில் அலுவலகம் முடித்துத் திரும்பும் 20 நிமிடப் பேருந்துப் பயணத்தில் இருக்கைகிடைக்காது நின்று கொண்டு வந்ததில் அலுத்துப் போய் வீட்டுக்குள் நுழையும்போது நினைவில் வந்ததுஅம்மாவின் சித்திரம்தான். சீரான சாலையில் A.C. பேருந்தில் ஒரு நாள் நின்றதே கடுப்பாகிறது.
கரிசல் காட்டின் மொத்த வெயிலையும் சுமக்கும் பேருந்துகளின் நெரிசலில் அலுவலக நாளைக் கடந்துவீட்டினுள் நுழைகையிலேயே, இடது புறம் கிடக்கும் நாற்காலியில் கைப்பையை வீசி விட்டு சமையலறைக்குள்ஓட்ட நடையாக நுழைவார் அம்மா. ‘வேலைக்குச் செல்லும் நம் பெண்களிடம் குற்ற உணர்வை எப்போதும்கோருகிறது நம் சமூகம்’ என்று ச. தமிழ்ச்செல்வன் எழுதி இருப்பார். கல்வி அலுவலராகப் பணி புரியும்போதும்சரி, இன்றும் சரி, தேவையே அற்ற அந்தக் குற்ற உணர்வின் நெருடலை அம்மாவிடம் காணலாம்.
அவரது பெற்றோர் ஆசிரியராக இருப்பினும் சிறு வயதில் தந்தையின் இழப்பு அம்மாவின் குடும்பத்தைக்கடுமையாக அலைக்கழித்தது. இரண்டு அண்ணன்களின் பாச வளர்ப்பினில் படித்துச் சிறந்து திருமணத்திற்குமுன்னரே தலைமை ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து விட்டார்.
நான் இரண்டாம் வகுப்பு வரையும் அண்ணன்கள் ஆரம்பக் கல்வியும் படித்தது அம்மா பணிபுரிந்த பஞ்சாயத்துயூனியன் நடுநிலைப்பள்ளியில்தான்.
ஏனோதானோவென்று இருந்த பள்ளியை பல வித எதிர்ப்புகளுக்கு இடையில் அற்புதமாகச் சீரமைத்துநடத்தினார். அங்கே அம்மா மிகப் பெரும் ஆளுமை. நானே பள்ளியில் வைத்து ‘அம்மா’ என்றுகூப்பிட்டதில்லை. அவர் பணிபுரிந்த 18 வருடங்களும் அந்தப்பள்ளிக்குப் பொற்காலம் என ஊரார் பேசுவதைசமீபமாகக் கூடக் கேட்டேன். ஒவ்வொரு வருடமும் Merit தேர்வில் அப்பள்ளியில் இருந்து முடிந்த வரைநிறையப் பிள்ளைகளைத் தேர்வு பெற வைத்து கல்வி உதவித்தொகை வாங்க வழிகோலுவார்.
‘அம்மா சொல்லிக் குடுத்த grammerதான் பாப்பா எனக்கு அடித்தளம்‘ என சிலாகிக்கும் ஆங்கிலப் பேராசிரியர், ஒரு IAS அதிகாரி உட்பட பல துறைகளிலும் அம்மாவின் பள்ளி மாணவர்கள் சிறப்பிப்பதைக் காணலாம். ‘பெரிய டீச்சர்’ பெயர் அடித்து இன்றுவரை அடிக்கப்படும் விழா அழைப்பிதழ்களே அவர் மீதான ஊரின்மதிப்புக்கும் நேசத்துக்கும் சான்றுகள். அவ்வூரிலிருந்து மாறி வந்த பின்னும் அங்கு பணிபுரிந்த சத்துணவுஆத்தா, அண்ணாச்சி செல்லையா என அவர்கள் இறுதிக்காலம் வரை எங்கள் வீட்டோடு நேசமாக இருந்தனர்.
நேர்மையான பெற்றோருக்குப் பிள்ளைகளாக இருப்பதை விட அறத்தினைக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழிவேறேது? நாங்கள் கற்ற அறத்தின் அடித்தளம் வீடுதான். கல்வி அலுவலரான பின் காலில் சக்கரம் அல்லாதகுறைதான் அம்மாவுக்கு.
கல்வி அலுவலகங்களில் சந்திக்கும் சிக்கல்கள் விதவிதமாக இருக்கும். எப்போது visit செல்லும்போதும்பள்ளியிலேயே இல்லாத ஓர் ஆசிரியரைப் பற்றிப் புகார் எழுத வைத்துவிட, அவர் அம்மாவைக் குறை சொல்லிமாவட்டத் தலைநகரின் பேருந்து நிறுத்தத்தின் முன்னர் பெரிய தட்டிப்பலகை வைத்துவிட்டார். அதைப்பார்த்துநொந்து போய் வீட்டில் அம்மா வருத்தப்பட்ட மறுநாளே அதன் எதிரே ஆசிரியர் கழகத்திலிருந்து மறுப்புத்தட்டிப்பலகை வைக்கப்பட்டிருந்தது.
இத்துணை பரபரப்புக்கு மத்தியிலும் உறவுகளுக்கான நேசத்தில் அம்மா குறை வைத்ததே இல்லை. எட்டியஎந்த உயரமும் தலையில் ஏறிவிடவோ தோற்றத்தை மாற்றி விடவோ இல்லை. அப்பா பெரிதும் கண்டுகொள்ளாத அவரது குக்கிராமத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செல்வது, செல்லும்போதெல்லாம்பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஆங்கிலம் சொல்லித் தருவது என் மனதில் நீங்காத காட்சிகளில் ஒன்றாகநிலைத்துப் போனது. அப்பாவும் அவர் அக்காவும் வாதிட்டு முறுக்கிக் கொள்ளும்போதெல்லாம் இடையில்விழுந்து கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தியது அம்மாதான்.
எதையும் பகிர்ந்து கொள்ளும் என் முதல் நட்பு அவர்தான். பதின் பருவக் கிறுக்குத்தனங்களில் வாதிட்டுஎகிறும்போதும் அணைத்தே நடத்திக் கொண்டு வந்தார். நினைவு தெரிந்து. ஒரே ஒரு முறை கூட அம்மாஎன்னை அடித்ததே இல்லை. குழந்தைத்தன ஒளித்தல்கள் தவிர அம்மாவிடம் பொய் சொல்லவேதேவையிருந்ததில்லை.
எங்களைத் திட்டுவதற்குக் கூட திருக்குறளும் பழமொழிகளும்தான் துணைக்கு வரும். என் பிள்ளைகளுக்குநான் சொல்லும் பல அறிவுரைகளும் அறம் சார்ந்த சொற்களும் அம்மாவிடம் கேட்டவைதான்.
என் கல்லூரி விடுதியில் வாரத்தில் ஒருநாள் பெற்றோர் தின்பண்டம் தந்து செல்லலாம். ‘இந்தத் தின்பண்டம்சாப்பிட்டால் நல்லா இருக்குமே’ என்று நான் நினைத்துக்கொண்ட அதே வாரம் அம்மா அனுப்பும் பையில் அதுஇருப்பதைக்கண்டு திகைத்துப் போயிருக்கிறேன்.
பொருளாதாரத்தில் இன்றும் பிள்ளைகளுக்குக் கொடுப்பவராகத்தான் இருந்தாலும் அம்மா எங்களுக்குச்சேர்ந்து வைத்த மிகப்பெரிய சொத்து குடும்ப நண்பர்கள்தாம்.
என் பெரியம்மா, அக்காக்கள், அக்கா பிள்ளைகள் என நான் சொந்தம் சொல்லும் குடும்பத்தில் பெரியப்பாவைநான் ‘சார்’ என்று அழைப்பதைப் பார்த்தும் பெரியம்மாவும் அம்மாவும் ‘டீச்சர்’ என்று அழைத்துக்கொள்வதைப்பார்த்தும் என் நண்பர்கள் குழம்பிப் போவார்கள். பாசத்தில் திளைக்கவிட்டு என்னை வளர்த்து மகளாகவேவரித்துக் கொண்ட பெரியம்மாவும் தன் இறுதிக்காலம் எங்களின் அடுத்த தலைமுறைக்கும் தின்பண்டங்கள்வாங்கிக் குவித்து நெருங்கிய பந்தமாக இருந்த சத்யபாமா டீச்சரும் அம்மாவின் பள்ளி ஆசிரியர்கள்.
அம்மாவின் தனிப்பட்ட வாழ்வில் கடுமையான சோதனைகள். தகப்பனில்லாத தங்கையை அன்பு பொழிந்துவளர்த்த அண்ணன்களின் திடீர் இழப்புகள், இன்னதென்று இல்லாத உடல் துன்பங்கள்… இத்தனைக்குமத்தியிலும் அம்மாவின் மன உறுதியும் பொறுமையும் நிதானமும் ஒருநாளும் குலைந்ததில்லை. அம்மாவின்அம்மாவான, எங்களுக்கு இன்னொரு அம்மாவான அழகம்மா பாட்டி வழி வந்தது அது.
விவரமாகப் பிழைக்கத் தெரிந்தவரில்லை அம்மா. ஆனால் இன்று வரை எனக்கு ஒரு மனக்கலக்கம் என்றால்அம்மாவிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும். நாங்கள் துவண்டு போகும் பொழுதுகளில் எளிமையாக‘வாழ்வு என்றைக்குமே கண்ணாடிப்பாதையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது’ என்றுதேற்றிச் செல்வார்.
அம்மாவின் பொறுமையில், மன உறுதியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலும் வாழ்வினை எளிதாகவாழ்ந்துவிடலாம் என்று தோன்றும்.
சிறு வயதில் பரத வகுப்பு முடித்து வருகையில் அம்மா வங்கித் தந்த சர்பத், டவுனுக்கு ஆடைகள் வாங்கப்போகும்போது நடராஜா ஹோட்டலில் வாங்கித் தந்து உண்ண வைத்த சோளா பூரி இதெல்லாம்தான் என்வாழ்வின் சுவைகளாக மனதில் என்றும் தித்திக்கின்றன.
எத்துணை எழுதினாலும் பேசினாலும் அம்மாவின் பொருட்டு நான் கொண்டிருக்கும் மெருமதிப்பையும்நேசத்தையும் விளக்கவே இயலாது.
அம்மாவை விட நான் உயரமாகவே இல்லை. இன்றைக்கும் தோளில் சாய்ந்து கட்டிக்கொள்ள அது வசதியாகவேஇருக்கிறது.
என்றுமே எல்லா விதத்திலும் அம்மா நான் அண்ணாந்து வியக்கும் உயரம்தான். ❤️
No comments:
Post a Comment