2023-09-16

அன்னை இட்ட தீ

 ‘‘என்ன ரங்கம்மா, இவ்ளோ நேரமாகிப் போச்சி… உன்னப் பாத்துதான் காத்துக்கிட்டிருக்கோம். மதுர வர போய்த் திரும்பணும்ல… ஆற அமரவும் வர முடியாது. வந்து ஒன்னய அனுப்பனும்… நிம்மதியா ஒரு வேலை ஆகுதா?’’ காசெதுவும் வாங்காமல் புண்ணியத்துக்கு வருபவளிடம் உரத்தும் சொல்ல முடியாத புலம்பல் தொடங்கியது.


வந்து இறக்கி விட்ட மகன் வண்டியைத் திருப்பும் முன்னரே வந்த அங்கலாய்ப்பைக் கேட்டுக்கொண்டே ‘‘நானே சாயங்காலம் வந்துர்ரன் தம்பி’’ என்று சொல்லத் திரும்பி, அவனது ‘இது தேவையா ஒனக்கு’ பார்வையைப் பெற்றுத் திரும்பி வீட்டுக்குள் விரைந்தாள் ரங்கம்மா.

‘யம்மா, தனியாக் கெடந்து பாடுபட்ட காலமெல்லாந்தான் சீரழிஞ்ச… இப்பதான் நல்லாயிருக்கம்ல… பேரம் பேத்திகளே தலையெடுக்குற காலம்… நிம்மதியா ஒக்காந்து கிட்ணா ராமான்னு இருக்காம வயசானவகளப் பாக்குற வேலை தேவையா இப்ப?’

எத்தனை முறை மகன் வைதாலும் ஒரே பதில்தான் ரங்கம்மாவிடம் இருந்து வரும். ‘யய்யா, தாயாரம்மாக்கு நான் பட்ட கடனை எப்படியும் தீக்க முடியாது. இது என் மனசு திருப்திக்குத்தான். இந்த விசயத்துல மட்டும் என்னத் தட சொல்லாத.’


அன்னை இட்ட தீ - சிறுகதை
ஓவியங்கள்: ரமணன் (விகடன்)

அதற்கு மேல் எதுவும் பேச முடியாது. டவுனில் குடிபோன பிறகு எடுத்தேறி வர முடியாததால் மூன்று நாள்களுக்கு ஒரு முறை வந்து குளிப்பாட்டி, பவுடர் அடித்து, சாப்பாடு கொடுத்து, நகம் வெட்டி விட்டு சாயங்காலமாகத் திரும்புவது வழக்கம். மற்ற நாள்களில் வீட்டாள்கள் பாடுதான்.

‘‘ரங்கம்மா, அடுப்படில அரிசி எடுத்து வச்சிருக்கேன், தண்ணியாக் கஞ்சி வச்சுக்குடு. போன தடவை ஒம்பாட்டுக்க நெறய அரிசி போட்டு கெட்டியாக் குடுத்துட்டுப் போய்ட்ட… அடுத்த ரெண்டு நாள் நாங்க சீப்பட வேண்டியதாப்போச்சி. இந்த எளவெடுத்த பட்டிக்காட்ல வேலைக்கி ஆள் கெடைக்கிதா, இல்ல நமக்குத்தான் முடியுதா? மத்த எல்லாரும் அங்கங்க டவுன்ல போய் பதுங்கிட்டாக. நீகூடப் பாரு, மகன், பேரம் பாக்கவும் சாத்தூருக்குப் போய்ட்ட. இந்த மனுசனக் கெட்ன தலையெழுத்து… இன்னும் மண்ணக் கிண்டிக்கிட்டு இங்கயே கெடக்க வேண்டி இருக்கு. இதான் சாக்குன்னு எங்க தலையில கட்டிட்டாக. காலக் கெட்டிப் போட்டாக்கூட லேசா அசஞ்சிக்கலாம் போல, இந்தப் பெருச விட்டு எங்கிட்டும் நகர முடியல… நம்ம தலையெழுத்து…’’

பேசிக்கொண்டே போன அம்மாவை அவள் மகள் கடுப்பாக இடைமறித்தாள். ‘செரி வந்து கார்ல ஏறும்மா… ஏற்கெனவே லேட்டு.’

வண்டி கிளம்பும்வரை பார்த்துவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு தளர்ந்து வீட்டினுள் நடந்தாள் ரங்கம்மா.

அசைவு தெரிந்து மெல்லக் கண்களைத் திறந்து, ‘‘களையெடுப்பு முடிச்சிட்டுதான் வந்தியா’’ என்றாள் தாயாரம்மா. இரண்டு வருடங்களாகவே அவளுக்குக் கால சிந்தனை நேர்க்கோட்டில் இல்லை. பெரும்பாலும் அவள் சம்சாரியாக இருந்த காலத்திலேயே தங்கி இருக்கும். வெகு அரிதாக நிகழ் காலத்திற்கு வரும்.

அப்படி வரும்போது பெருகும் வேதனை தாங்க இயலாது அவள் மனமே அவளைப் பழைய நாள்களுக்குக் கூட்டிப் போய்விடும் போல. ‘‘ஆமாம்மா, முடிச்சி அய்யா பாத்தி கட்டிக்கிட்டு இருக்காரு. நான் இந்தப் பக்கம் வந்துட்டேன்…’’ அவள் காலத்துக்கே போய்ப் பேசுவது ரங்கம்மாவுக்கும் கொஞ்சம் சமாதானமாக இருந்தது. கரிசல் மண்ணைப் பொன்னாக்கிப் பாடுபட்ட அய்யா கொஞ்சம் கொடுத்து வைத்தவர். வைகுண்டம் ஏகிப் பத்து வருடங்களாகிப்போனது.

இன்றைக்கு சிமெண்ட் போட்டு ஈரம் இறங்காது நிற்கும் இதே தெருவில், இந்த வீட்டின் ஈரம் சுரந்த வாசற்படியில் எத்தனை முறை நடந்து திரிந்திருக்கும் ரங்கம்மாவின் கால்கள்.

சாத்தூரில் கட்டிக்கொடுத்து, இரண்டே வருடங்களில் வெள்ளைச்சீலையோடும் கைப்பிள்ளையோடும் தாயில்லாத தாய் வீட்டுக்குத் திரும்பி வருகையில் ரங்கம்மாவுக்குப் பதினேழு வயது. மலங்க மலங்க முழித்துக்கொண்டு சில நாள்களைக் கடந்த பின், பிள்ளையையும் இடுக்கிக்கொண்டு தகப்பனோடு காட்டு வேலைக்குக் கிளம்பினாள். ஊரிலேயே பெரிய சம்சாரியான கார வீட்டுக்காரர் காடு அவளுக்கு இடமில்லை என்றா சொல்லும்.

காட்டுக்குள் நின்ற மங்கத்தாயாரு, கைப்பிள்ளையோடு இவள் வருவதைப் பார்த்து விரைந்து வந்தாள். ‘ரங்கா, உன் நிலமையும் இப்படி ஆகிப்போச்சே… சரி, கலங்காத… பயல வச்சிக்கிட்டு காட்டுக்கு வரவேணாம். நம்ம வீட்ல பயறு திரிக்க, அரிசி குத்தன்னு நெறய வேல கெடக்கு… பிள்ளையத் தொட்டில் கட்டிப் போட்டு நெனல்ல வேலையப் பாரு…’ என்று அனுப்பி வைத்தாள். திரும்பி நடக்கையில், ‘பொழுதுசாய மறக்காம வந்து பிள்ளைக்குச் சோறு எடுத்துட்டுப் போ’ என்ற குரல் தொடர்ந்து வந்தது. பிள்ளை இடுப்பளவு வளரும் வரை காட்டு வேலைக்குப் போனதில்லை.

இதே தெருதான்… இன்றைக்கு டைல்ஸ் போட்ட இதே வீடு இருக்கும் இடத்தில் இருந்த காரை வீட்டு முற்றத்தில்தான் சாயங்கால நேரங்களில் நெய் மணந்து தெருவையே நிறைக்கும்.

மங்கத்தாயாரு திருமணமாகி வருகையில் ரங்கம்மா ஏழெட்டு வயது நிரம்பிய சின்னப்பிள்ளை. பெரிய வீட்டுக்கு வரும் மருமகளைப் பார்க்க ஊரின் எல்லையிலேயே போய் நின்று மாட்டு வண்டியில் பின்னாலேயே ஓடி வந்த பொடுசுகளில் அவளும் ஒருத்தி.

மனைவியை அகாலத்தில் இழந்த காரைவீட்டுப் பெரியய்யா, அவர் மக்களோடு வீட்டை ஆளப் பெண் இல்லாது தவித்துக்கொண்டிருந்த காலத்தில் வெயிலுக்குப் பதினியாக வந்து சேர்ந்தாள் மங்கத்தாயாரு. தளர்ந்து கிடந்த பெரியய்யாவின் தாயாருக்கும் தனித்தெம்பு வந்தது. ‘எங்க குலம் விளங்க வந்து சேர்ந்தியே தங்கமே… வீட்டுக்குப் பின்னால் போய் அக்கம்மாவுக்கு உன் கையால விளக்கேத்தி வை… நீளாயுளோட நிறைஞ்சு வாழணும்’ என்று நெகிழ்ந்தாள்.

வந்து சேர்ந்த சில வருடங்கள், இரண்டு மகன்கள், இரண்டு பெண்கள் என பிள்ளைக் காலமாகவே ஓடிப்போனது. விளக்குக்குத் திரி திரிக்கும்போது திடீரென ஒரு நாள் முழிப்பு வந்தவள் போல் கேட்டாள். ‘ஆமா, எதுக்கு அக்கம்மாவுக்கு நாம வீட்டுக்குப் பின்னால விளக்கேத்தறோம்? இங்க எதுவும் மாடு முட்டி இறந்த பெண்ணா?’

‘அட பெண்ணே, ஒனக்கு அந்தக் கதையை இன்னும் நான் சொல்லலையா?’ என்று ஆரம்பித்தார் பாட்டியம்மா.

‘ஒன்னையும் என்னையும் போல இந்த வீட்டுக்கு மருமகளா வந்தவதான் அக்கம்மா… பிறந்த வீட்டுக்குச் செல்லப்பெட்டி. அருமையாக வளர்ந்த ஒற்றை மகள். தாயில்லாத பிள்ளையாதலால் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து வைக்க விடாமல் தகப்பனாரும் அண்ணன்மாரும் வளர்த்தார்கள். அவ்வளவு செல்லத்திலும் குணத்தில் குறையாத, கொஞ்சமும் அதிர்ந்துபேசாத பெண். இந்த ஊரிலேயே பெரிய வீட்டில், முதல் மருமகளாகக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெருமிதத்தில் கட்டிக் கொடுத்த அவள் தகப்பனாருக்கு, அதுதான் பெரிய வினையாகப் போகிறதுன்னு தெரியலை.

தினமும் வீட்டில் வடிக்கும் சாப்பாட்டுக்கு கம்போ பிற தானியங்களோ குத்த வேண்டியது இவள் வேலை. வேலையாட்கள் எல்லாம் காட்டுக்கு மட்டும்தான்.

அன்னை இட்ட தீ - சிறுகதை

அவள் கணவனையும் சேர்த்து வீட்டில் ஐந்து ஆண்களுக்கு, காட்டு வேலை, கால்நடை கவனிப்பு என்று திரிந்து வீடு திரும்பும் வயிறுகளுக்கு தினமும் வட்டிலில் குமித்து வைத்துச் சோறிட வேண்டும். சமையலும் பிற வேலைகளும் அத்தையம்மா பார்த்துக் கொண்டாலும், வீட்டில் வடிக்கிற சோற்றின் அளவுக்கு நாளெல்லாம் உரலோடு மல்லுக்கட்ட வேண்டும். கன்றுக்குட்டியைப் பிடித்து நுகத்தடி மாட்டினாற்போல ஒரு நிலைமை அக்கம்மாவுக்கு.

இந்த வேதனையை மேலும் பெரியதாக்கி விடுவது, தினமும் இரவு கால் வயிற்றோடு உறங்க வேண்டி இருக்கும் நிலைதான். வடித்த மொத்தச் சோற்றையும் பெரிய குண்டானில் வைத்துப் பரிமாறுவதற்கு வைத்துவிட்டு, தன் கணவருக்குப் பரிமாறிய கையோடு தானும் உண்டுவிட்டு அத்தையம்மா உறங்கப் போய்விடுவார். அடுத்து உண்ண வரும் இளவட்டங்களுக்கு ஆனது போக மிச்சமிருப்பது ஒரு கைச் சோறுதான். கூடக் கொஞ்சம் சேர்த்து ஆக்கச் சொல்லிச் சொல்வது சின்னத்தனமாகப் போகுமே என்று பெரும் தயக்கம்.

அவள் வயிற்றில் அனல் எரிய உறங்கப் போவது யாருக்குமே தெரியவில்லை. தன் தகப்பனார் கிண்ணத்தோடு சுடுசோற்றில் கவிழ்த்துப் பிசைந்து தரும் நெல்லரிசி நெய்ச்சோற்றின் நினைப்போடு ஒவ்வொரு இரவும் கழியும்.

ஆறேழு மாதங்கள் வரை தனக்குத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு வேலையைத் தொடர்ந்தாள் அக்கம்மா. பசி தாங்க முடியாமல் மாட்டுக்கு வைப்பதற்கான பருத்திப் பிண்ணாக்கை யாரும் அறியாமல் ஒரு கை அள்ளித் தின்றுவிட்டு இரண்டு நாள்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டாள். பிறந்த வீடு திரும்பலாம் என்று வேதனை பொங்கி வந்தாலும் அப்பாவுக்கு அவமானமாச்சே என்று மருகி அமைதியாவாள். அவள் வேதனையை அறிவார் யாருமில்லை.

எதுவுமே சமாதானமாகாத, வலியையும் பசியையும் தவிர வேறேதும் அறிய முடியாத ஒரு பின்னிரவில் அக்கம்மா ஓடிப்போய் வீட்டுக்குப் பின்னிருந்த கிணற்றில் குதித்துவிட்டாள்.

அதிர்ந்துபோன வீட்டினருக்கு, காரணம் புலப்படவே இல்லை. இரண்டு நாள்கள் முன்னர் ‘இனியும் இந்த உரலோடு மல்லுக்கட்ட ஏலுமான்னு தெரியலை…’ என்று லேசாகப் புலம்பியதை மாட்டுக்குப் புல்லறுத்துப் போட வந்த சீனித்தாய் சொன்ன பின்னர்தான் புரிந்தது.

அவள் போய்ச்சேர்ந்த பின்னர்தான், நாலு நாளாவது கூட்டிக் கொண்டு போய் நெய்ச்சோறு ஆக்கிப் போடச்சொல்லிச் சொல்லி விட்ட தாக்கல் தகப்பனாருக்குப் போய்ச் சேர்ந்தது. அதைச் சத்தமாகச் சொல்லியழுதால் சம்பந்தக்காரர்களுக்கு மிதமாகிப்போகுமே என மனசுக்குள் கதறியழுதுவிட்டுப் போனார்.

இப்படி ஆகிப்போச்சே என்ற பெரும் வருத்தத்தில் அதோடு அந்தக் கிணற்றை மெத்திப் பீடம் கட்டினார்கள். அவர்தான் நம் வீட்டுத் தெய்வம். இன்றைக்கு வரை நெய் விளக்கேத்தி மனசைத் தேத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தெய்வமாவது இப்பிடி ஏதாவது ஒரு காரணத்தால்தான்’ சொல்லிப் பெருமூச்சு விட்டாள் பாட்டி.

‘இப்படிப் பசியோடும் வலியோடும் இங்க வாழ வந்த பிள்ளை மாண்டுபோனதே’ என மங்கத்தாயாருக்கு துக்கம் தாளவில்லை. ‘விளக்கேத்தி வச்சி அவள் மனசு ஆறுமா? இல்லை நாமதான் சமாதானப்படலாமா?’ ஒரு வாரமாக யோசித்து, கணவரிடம் பேசினாள்.

எப்போதாவது ‘பிள்ளைச் சோறு’ கேட்டுத் தயங்கி நிற்கும் பெண்களுக்கு அதன் பிறகு காரைவீடு அமுத சுரபியானது. தினமும் வயல் விட்டுத் திரும்பும் நேரத்தில் காரை வீட்டை ஒட்டிய சிறுவீட்டுத் திண்ணையில் சுடச்சுட நெல்லரிசிச் சோறு ஒரு ஆள் தூக்க முடியாத பானை நிறைய வைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே பெரிய சட்டி நிறைய கடைந்த மணமான பருப்பும், பெரிய தூக்கு நிறைய நெய்யும், அப்போதுதான் கறந்து வைத்த பசும்பாலும்.

பிள்ளைச்சோறு காய்ச்சவே தனி ஆள் போட்டுத் தயாரானது.

யாரையும் கேட்க வேண்டியதில்லை. வேண்டுமளவு பிள்ளைகளுக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த நேரங்களில் வீட்டு ஆட்களோ வேலை ஆட்களோ அந்தப் பக்கம் நடமாடக் கூடாது என்பது மங்கத்தாயாரின் ஆணை. அறிந்தோ அறியாமலோ, சோறு எடுக்கும் கைகளைத் தயங்கச் செய்துவிடக் கூடாது.

அலுத்துச் சலித்து வயல்வேலை முடித்து வரும் தாய்மாருக்கெல்லாம் ‘யம்மா பசிக்கி பசிக்கி’ என்ற குரல்களை அமத்தி அரக்கப்பறக்கக் கஞ்சி காய்ச்சவோ, பாதிப் பசியோடு பிள்ளைகளை அமட்டி உறங்க வைக்கவோ தேவையே இல்லாமற்போனது.

பிள்ளைச்சோறு எடுக்க அடுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்து வரும் தாய்மாருக்கு ‘பெரிய சட்டியா எடுத்துட்டு வந்து வயித்துப்பிள்ளைக்கும் சேத்து எடுத்துட்டுப் போ’ என்ற அதட்டல் வந்து விழும்.

கூடாரவல்லிக்கு ஊர்ப் பெரிய சம்சாரிகளெல்லாம் பெருமாளுக்குப் படைத்து விட்டு ஆண்டாளைப் பார்க்க வண்டி கட்டிப் போகும் நேரத்தில், காரை வீட்டுத் திண்ணையில் சிறு அண்டா நிறைய சர்க்கரைப் பொங்கல் பொன்னொளிர வந்து அமரும்.

வெய்யக்காலங்களில் மோரும் பானக்கரமும் பாதி ஆளுயர மண்பானைகளில் காலையில் இருந்து காத்துக் கிடக்கும். இருக்கங்குடிக்கு நடந்து போகும் ஆட்களெல்லாம் சாலையில் இருந்து ஓரெட்டு விலகி தாகந்தீர்த்துவிட்டுப் போவார்கள்.

வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும்கூட ஒருநாள் விடாது எரியும் அணையா அடுப்பாக மங்கத்தாயாரு முதல் நாள் இட்ட தீ எரிந்தது.

அடுப்பெரிக்கும் விறகு குமிக்க, பிள்ளைச்சோறுக்கான அரிசியும் பருப்பும் ஒதுக்க, நெய்க்கும் பாலுக்கும் என்று கூட இரண்டு பால்மாடுகள் வாங்கிவிட என்று மங்கத்தாயாரின் கணவரும் நிறை மனதோடு அனைத்தையும் செய்து கொடுத்தார்.

அக்கம்மாவின் விளக்கு மிகப் பிரகாசமாக எரிவதாகப் பட்டது அவருக்கு. விளக்கு நெய்யா அவ மனசத் தணிச்சிருக்கும்?!

பொன் நிறையாத காரை வீடுகள் குறைவே… ஆனால் குணம் எல்லாருக்குமா நிறைந்து இருக்கிறது?! மங்கத்தாயாரு அதற்குப்பின் ஊருக்கே தாயாரம்மாதான்.

‘‘தண்ணி… தண்ணி… கெஞ்சி… கெஞ்சி…’’ அடுப்படியில் நிற்கும்போதே மனதை அறுப்பது போல குரல் கேட்டது. நைந்து கிடக்கும் அந்த மொத்த சீவனும் தன்னைத் திரட்டிப் பேசுவது பெரும்பாலும் இந்த ஒரு கெஞ்சலைத்தான்.

‘தண்ணியாகக் கிடக்கும் கஞ்சியை எடுத்துக் கொண்டு போய்த் தரணுமே… கொஞ்சம் கூழாகக் கொடுத்தாலும் தன்னையும் போய்ச்சேரவும் வழியற்றுக் கிடக்கும் உயிரையும் சாபங்கொடுத்து வசவு விழும். பெருமாளே… இப்படியும் ஒரு வேதனையான நிலையைப் பார்க்க வச்சிட்டியே’ மனது உடைந்து கட்டிலில் கிடக்கும் சிறுத்த உருவத்தை நோக்கி நடந்தாள் ரங்கம்மா.

‘‘நீ வரப்ப தாற கஞ்சி கொஞ்சம் தாங்குது’’ குழறி வந்த குரல் நிகழ்காலத்தில் இருந்தது. பசியையும் தாகத்தையும் மட்டுமே அறியும் உயிரின் தவிப்புக் குரல்.

எத்தனை வயிறுகள் வாழ்த்தியிருக்கும்… எத்தனை வறண்ட நாவுகள் போற்றியிருக்கும்… மூத்திர வாடைக்குள் பசித்து வெறும் வெளியைத் துழாவும் இந்தக் கைகள்தானே இதே இடத்தில் முழங்கை வழிவார நெய் பெய்து அள்ளி அள்ளித் தந்து பசியாற்றியது…

வானம் மங்கும் வேளையில் வீட்டார் வந்து சேர, சொல்லிக்கொண்டு புறபட்டாள் ரங்கம்மா. கட்டிலில் குனிந்து ‘‘யம்மா, போய்ட்டு வாரேன். ரெண்டு நாள் செண்டு வாரேன்’’ என்று உரத்துச் சொல்லி, தலையசைப்பை பதிலாகப் பெற்றுக் கொண்டு திரும்பினாள் ரங்கம்மா.

நாலெட்டு எடுத்து வைக்கவும் பின்னாலிருந்து தீனமாகக் குரல் கேட்டது…

‘‘ரங்கா, ஏனம் கொண்டு வரலேன்னா இங்க இருந்து எடுத்துக்கோ. மறக்காம பிள்ளைக்குச் சோறு எடுத்துட்டுப் போ...

2022-10-28

அம்மா ❤️

நல்ல மழை நாள் ஒன்றில் அலுவலகம் முடித்துத் திரும்பும் 20 நிமிடப் பேருந்துப் பயணத்தில் இருக்கைகிடைக்காது நின்று கொண்டு வந்ததில் அலுத்துப் போய் வீட்டுக்குள் நுழையும்போது நினைவில் வந்ததுஅம்மாவின் சித்திரம்தான்சீரான சாலையில் A.C. பேருந்தில் ஒரு நாள் நின்றதே கடுப்பாகிறது.


கரிசல் காட்டின் மொத்த வெயிலையும் சுமக்கும் பேருந்துகளின் நெரிசலில் அலுவலக நாளைக் கடந்துவீட்டினுள் நுழைகையிலேயேஇடது புறம் கிடக்கும் நாற்காலியில் கைப்பையை வீசி விட்டு சமையலறைக்குள்ஓட்ட நடையாக நுழைவார் அம்மா வேலைக்குச் செல்லும் நம் பெண்களிடம் குற்ற உணர்வை எப்போதும்கோருகிறது நம் சமூகம்’ என்று தமிழ்ச்செல்வன் எழுதி இருப்பார்கல்வி அலுவலராகப் பணி புரியும்போதும்சரிஇன்றும் சரிதேவையே அற்ற அந்தக் குற்ற உணர்வின்  நெருடலை அம்மாவிடம் காணலாம்.


அவரது பெற்றோர் ஆசிரியராக இருப்பினும் சிறு வயதில் தந்தையின் இழப்பு அம்மாவின் குடும்பத்தைக்கடுமையாக அலைக்கழித்ததுஇரண்டு அண்ணன்களின் பாச வளர்ப்பினில் படித்துச் சிறந்து திருமணத்திற்குமுன்னரே தலைமை ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து விட்டார்.



நான் இரண்டாம் வகுப்பு வரையும் அண்ணன்கள் ஆரம்பக் கல்வியும் படித்தது அம்மா பணிபுரிந்த பஞ்சாயத்துயூனியன் நடுநிலைப்பள்ளியில்தான்.


ஏனோதானோவென்று இருந்த பள்ளியை பல வித எதிர்ப்புகளுக்கு இடையில் அற்புதமாகச் சீரமைத்துநடத்தினார் அங்கே அம்மா மிகப் பெரும் ஆளுமைநானே பள்ளியில் வைத்து ‘அம்மா’ என்றுகூப்பிட்டதில்லைஅவர் பணிபுரிந்த 18 வருடங்களும் அந்தப்பள்ளிக்குப் பொற்காலம் என ஊரார் பேசுவதைசமீபமாகக் கூடக் கேட்டேன்ஒவ்வொரு வருடமும் Merit தேர்வில் அப்பள்ளியில் இருந்து முடிந்த வரைநிறையப் பிள்ளைகளைத் தேர்வு பெற வைத்து கல்வி உதவித்தொகை வாங்க வழிகோலுவார்.


அம்மா சொல்லிக் குடுத்த grammerதான் பாப்பா எனக்கு அடித்தளம்‘ என சிலாகிக்கும் ஆங்கிலப் பேராசிரியர்ஒரு IAS அதிகாரி  உட்பட பல துறைகளிலும் அம்மாவின் பள்ளி மாணவர்கள் சிறப்பிப்பதைக் காணலாம். ‘பெரிய டீச்சர்’ பெயர் அடித்து இன்றுவரை அடிக்கப்படும் விழா அழைப்பிதழ்களே அவர் மீதான ஊரின்மதிப்புக்கும் நேசத்துக்கும் சான்றுகள்அவ்வூரிலிருந்து மாறி வந்த பின்னும் அங்கு பணிபுரிந்த சத்துணவுஆத்தாஅண்ணாச்சி செல்லையா என அவர்கள் இறுதிக்காலம் வரை எங்கள் வீட்டோடு நேசமாக இருந்தனர்.


நேர்மையான பெற்றோருக்குப் பிள்ளைகளாக இருப்பதை விட அறத்தினைக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழிவேறேதுநாங்கள் கற்ற அறத்தின் அடித்தளம் வீடுதான்கல்வி அலுவலரான பின் காலில் சக்கரம் அல்லாதகுறைதான் அம்மாவுக்கு


கல்வி அலுவலகங்களில் சந்திக்கும் சிக்கல்கள் விதவிதமாக இருக்கும்எப்போது visit செல்லும்போதும்பள்ளியிலேயே இல்லாத ஓர் ஆசிரியரைப் பற்றிப் புகார் எழுத வைத்துவிடஅவர் அம்மாவைக் குறை சொல்லிமாவட்டத் தலைநகரின் பேருந்து நிறுத்தத்தின் முன்னர் பெரிய தட்டிப்பலகை வைத்துவிட்டார்அதைப்பார்த்துநொந்து போய் வீட்டில் அம்மா வருத்தப்பட்ட மறுநாளே அதன் எதிரே ஆசிரியர் கழகத்திலிருந்து மறுப்புத்தட்டிப்பலகை வைக்கப்பட்டிருந்தது.


இத்துணை பரபரப்புக்கு மத்தியிலும் உறவுகளுக்கான நேசத்தில் அம்மா குறை வைத்ததே இல்லைஎட்டியஎந்த உயரமும் தலையில் ஏறிவிடவோ தோற்றத்தை மாற்றி விடவோ இல்லைஅப்பா பெரிதும் கண்டுகொள்ளாத அவரது குக்கிராமத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் செல்வது செல்லும்போதெல்லாம்பிள்ளைகளைக் கூட்டி வைத்து ஆங்கிலம் சொல்லித் தருவது என் மனதில் நீங்காத காட்சிகளில் ஒன்றாகநிலைத்துப் போனதுஅப்பாவும் அவர் அக்காவும் வாதிட்டு முறுக்கிக் கொள்ளும்போதெல்லாம் இடையில்விழுந்து கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தியது அம்மாதான்.


எதையும் பகிர்ந்து கொள்ளும் என் முதல் நட்பு அவர்தான்பதின் பருவக் கிறுக்குத்தனங்களில் வாதிட்டுஎகிறும்போதும் அணைத்தே நடத்திக் கொண்டு வந்தார்நினைவு தெரிந்துஒரே ஒரு முறை கூட அம்மாஎன்னை அடித்ததே இல்லைகுழந்தைத்தன ஒளித்தல்கள் தவிர அம்மாவிடம் பொய் சொல்லவேதேவையிருந்ததில்லை.


எங்களைத் திட்டுவதற்குக் கூட திருக்குறளும் பழமொழிகளும்தான் துணைக்கு வரும்என் பிள்ளைகளுக்குநான் சொல்லும் பல அறிவுரைகளும் அறம் சார்ந்த சொற்களும் அம்மாவிடம் கேட்டவைதான்.


என் கல்லூரி விடுதியில் வாரத்தில் ஒருநாள் பெற்றோர் தின்பண்டம் தந்து செல்லலாம். ‘இந்தத் தின்பண்டம்சாப்பிட்டால் நல்லா இருக்குமே’ என்று நான் நினைத்துக்கொண்ட அதே வாரம் அம்மா அனுப்பும் பையில் அதுஇருப்பதைக்கண்டு திகைத்துப் போயிருக்கிறேன்.


பொருளாதாரத்தில் இன்றும் பிள்ளைகளுக்குக் கொடுப்பவராகத்தான் இருந்தாலும் அம்மா எங்களுக்குச்சேர்ந்து வைத்த மிகப்பெரிய சொத்து குடும்ப நண்பர்கள்தாம்.


என் பெரியம்மாஅக்காக்கள்அக்கா பிள்ளைகள் என நான் சொந்தம் சொல்லும் குடும்பத்தில் பெரியப்பாவைநான் ‘சார்’ என்று அழைப்பதைப் பார்த்தும் பெரியம்மாவும் அம்மாவும் ‘டீச்சர்’ என்று அழைத்துக்கொள்வதைப்பார்த்தும் என் நண்பர்கள் குழம்பிப் போவார்கள்பாசத்தில் திளைக்கவிட்டு என்னை வளர்த்து மகளாகவேவரித்துக் கொண்ட பெரியம்மாவும் தன் இறுதிக்காலம் எங்களின் அடுத்த தலைமுறைக்கும் தின்பண்டங்கள்வாங்கிக் குவித்து நெருங்கிய பந்தமாக இருந்த சத்யபாமா டீச்சரும் அம்மாவின் பள்ளி ஆசிரியர்கள்.


அம்மாவின் தனிப்பட்ட வாழ்வில் கடுமையான சோதனைகள்தகப்பனில்லாத தங்கையை அன்பு பொழிந்துவளர்த்த அண்ணன்களின் திடீர் இழப்புகள்இன்னதென்று இல்லாத உடல் துன்பங்கள்… இத்தனைக்குமத்தியிலும் அம்மாவின் மன உறுதியும் பொறுமையும் நிதானமும் ஒருநாளும் குலைந்ததில்லைஅம்மாவின்அம்மாவானஎங்களுக்கு இன்னொரு அம்மாவான அழகம்மா பாட்டி வழி வந்தது அது.


விவரமாகப் பிழைக்கத் தெரிந்தவரில்லை அம்மாஆனால் இன்று வரை எனக்கு ஒரு மனக்கலக்கம் என்றால்அம்மாவிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும்நாங்கள் துவண்டு போகும் பொழுதுகளில் எளிமையாகவாழ்வு என்றைக்குமே கண்ணாடிப்பாதையாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது’ என்றுதேற்றிச் செல்வார்.


அம்மாவின் பொறுமையில்மன உறுதியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலும் வாழ்வினை எளிதாகவாழ்ந்துவிடலாம் என்று தோன்றும்.


சிறு வயதில்  பரத வகுப்பு முடித்து வருகையில் அம்மா வங்கித் தந்த சர்பத்டவுனுக்கு ஆடைகள் வாங்கப்போகும்போது நடராஜா ஹோட்டலில் வாங்கித் தந்து உண்ண வைத்த சோளா பூரி இதெல்லாம்தான் என்வாழ்வின் சுவைகளாக மனதில் என்றும் தித்திக்கின்றன.


எத்துணை எழுதினாலும் பேசினாலும் அம்மாவின் பொருட்டு நான் கொண்டிருக்கும் மெருமதிப்பையும்நேசத்தையும் விளக்கவே இயலாது.


அம்மாவை விட நான் உயரமாகவே இல்லைஇன்றைக்கும் தோளில் சாய்ந்து கட்டிக்கொள்ள அது வசதியாகவேஇருக்கிறது.


என்றுமே எல்லா விதத்திலும் அம்மா நான் அண்ணாந்து வியக்கும் உயரம்தான்❤️